ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய வீரர் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எதிர்த்து சண்டையிட்ட இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஜெயத்ரத்சிங் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து, இன்று தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஜெயத்ரத்சிங் வீரமரணம் அடைந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலம் சகரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
ஜூலை மாதம் கடந்த 22 நாட்களில் காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் பலமுறை அத்துமீறி வாலாட்டியுள்ளது. 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். 18 முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ வீரரும், 9 வயது சிறுமியும் பலியாகினர். மேலும், ஒரு ராணுவ வீரர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக பூஞ்ச் கர்மாரா பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதல் நடத்தியதில் ஃபோக்ர் தாரா பள்ளி கட்டிடம் பெரும் சேதம் அடைந்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இந்திய ராணுவத்தினர் மீது 14 முறை தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.