காஷ்மீரில் பெண்களை பலாத்காரம் செய்கிறது இந்திய ராணுவம்... கன்னையாகுமார் பேச்சால் புதுசர்ச்சை
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பெண்களை ராணுவம் பலாத்காரம் செய்வதாக டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் குற்றம்சாட்டியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக ஜே.என்.யூவில் நிகழ்ச்சியை நடத்தினார்; இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார் என தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர் கன்னையாகுமார். அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
தற்போது ராணுவத்துக்கு எதிராக கன்னையாகுமார் கருத்துகளை தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜே.என்.யூவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பேசிய கன்னையாகுமார்,
தாய்நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்கும் தீரமிக்க ராணுவத்தினருக்கு மத்தியில் காஷ்மீரில் அப்பாவி பெண்களை பலாத்காரம் செய்கிற ராணுவத்தினரும் இருக்கின்றனர்.
மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும் குரல் கொடுப்போம். ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.