எல்லை தாண்டி வந்த பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரீயை திருப்பி அனுப்பி வைத்த இந்திய ராணுவம்
உதம்பூர்: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலிருந்து தெரியாமல் இந்தியப் பகுதிக்குள் வந்து விட்ட நபரை இந்திய ராணுவம் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தது.
மனிதாபிமான அடிப்படையில் அவரை இந்திய ராணுவத்தினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பிராந்திய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் எஸ்.டி. கோஸ்வாமி கூறுகையில், இந்திய ராணுவம் தரத்தையும், தார்மீக நெறிமுறைகளையும், பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடிக்கும் வழக்கம் கொண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் அம்ரா சவான் என்ற இடத்தைச் சேர்ந்தவர் காஷிப் பெய்க். இவர் தவறுதலாக ஜூன் 10ம் தேதி இந்தியப் பகுதிக்குள் வந்து விட்டார். அவரை ஊரி பகுதியில் வைத்து இந்தியப் படையினர் பிடித்தனர்.
அவருக்கு புதிய உடைகள் கொடுத்து அணிய வைத்த ராணுவத்தினர் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் அவர்களிடம் பெய்க் ஒப்படைக்கப்பட்டார். அவருடைய குடும்பத்திற்கு இனிப்புகளையும் இந்திய ராணுவத்தினர் கொடுத்து அனுப்பி வைத்தனர். முன்னதாக இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே சகோததி ஊரி பகுதியில் கொடி சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் பெய்க் ஒப்படைக்கப்பட்டார் என்றார் கோஸ்வாமி.
கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சத்யஷீல் யாதவ் செனாப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தான் பகுதிக்குள் போய் விட்டார். அவரை மீட்ட பாகிஸ்தான் படையினர் அவரை இந்தியாவிடம் ஒப்படைத்தனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது இந்திய ராணுவம் தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நல்லுறவு கிடையாது. இந்தியா நல்லுறவை நாடினாலும் கூட பாகிஸ்தான் தரப்பி்ல சீண்டல்கள் இருந்தபடியே உள்ளன. அவ்வப்போது எல்லைக்கு அப்பால் இருந்து துப்பாக்கிச் சூடுகள் நடப்பது சகஜம். தீவிரவாத ஊடுறுவல்களும் தொடரத்தான் செய்கின்றன.
இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியா தனது மனிதாபிமான முகத்தைக் காட்டுவதற்கு தயங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.