அதி நவீன பிரம்மோஸ் ஏவுகணை.. வெற்றிகரமாக சோதித்தது இந்திய ராணுவம்!
பெங்களூரு : பிரம்மோஸ் அதிநவீன ஏவுகணையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. ராணுவ உயரதிகாரிகள் ஒன் இந்தியாவிற்கு இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.
இந்த சோதனை கார் நிகோபர் பகுதியில் இன்று மதியம் 1.10 மணியளவில் நடந்துள்ளது. இன்று நடத்தப்பட்டது 47வது பிரம்மோஸ் சோதனையாகும்.
மலாக்கா ஜலசந்திப் பகுதியில் இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் கார் நிக்கோபார் தீவில் வைத்து இந்த சோதனையை இந்தியா நடத்தியுள்ளது.
சோதனை வெற்றிகரமாக இருந்ததாகவும், இலக்கை மிகத் துல்லியமாக பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய பிரம்மோஸ் பிளாக் 3 வெர்சன் ஆனது, மொபைல் லாஞ்சர் மூலம் சோதித்துப் பார்க்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட அனைத்து அம்சங்களையும் ஏவுகணை பூர்த்தி செய்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் தனது முழு தூரத்தையும் ஏவுகணை சென்றடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 290 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியதாகும். அந்தத் தூரத்திற்கு இன்றைய சோதனையில் அது சென்றது.
இந்த சோதனையின்போது ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
விரைவில் விமானப்படைக்கான பிரம்மோஸ் ஏவுகணை, சுகோய் விமானத்தில் பொருத்தப்பட்டு சோதனையிடப்படும் என்று தெரிகிறது.
சோதனை குறித்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சுதிர் மிஸ்ரா கூறுகையில், ‘நமது ஏவுகணைத் திறனை மீண்டும் நி்ரூபிப்பதாக இந்த சோதனை அமைந்துள்ளது. எதிரிகளின் இலக்கை மிகத் துல்லியமாக தாக்க் கூடிய வகையில் பிரம்மோஸ் ஏவுகணை அமைந்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனைக்காக ராணுவத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வு மற்றும் கல்விக் கழகத்தின் ஆய்வு உதவியாளர் அவினாஷ் கோட்பலே கூறுகையில், ‘இலங்கையை வைத்து இந்தியாவுக்கு எதிராக காரியம் சாதிக்க சீனா முயல்கிறது. எனவே பிரம்மோஸ் சோதனையின் வெற்றியானது முக்கியத்துவம் பெறுகிறது' என்றார்.
ஏப்ரல் 9ம் தேதி ஒரு சோதனை நடைபெற்றது. அது சோதனை பெற்றதாக முதலில் தகவல்கள் வந்தன. ஆனால் பின்னர் அந்தத் தகவலை ராணுவம் திரும்பப் பெற்றுக் கொண்டது. ஆனால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்றைய சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மோஸ் ஏவுகணை:
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இதை வடிவமைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்டிரோயனியா மற்றும் இந்தியாவின் டிஆர்டிஓ ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன.
8.4 மீட்டர் நீளம் உள்ள இந்த ஏவுகணையானது ஒலியை விட 2.9 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது. சாதாரண ஆயுதங்களை இதில் பொருத்தலாம். 290 கிலோமீட்டர் தூரம் பாயக் கூடியது. 300 கிலோ வெடிபொருட்களை இதில் பொருத்த முடியும்.
ரேடார்களின் கண்களுக்குச் சிக்காமல் மிகவும் தாழ்வாகப் பறக்கும். நிலம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் ஆகியுவற்றிலிருந்து இதை ஏவலாம்.