பாலகோட் போல பெரும் அதிரடி.. பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் சரமாரி தாக்குதல்.. பதற்றம்
ஸ்ரீநகர்: கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில், பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது போன்ற ஒரு சர்ப்ரைஸ் அதிரடியை இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக மறுபடியும் காண்பித்துள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்கள் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அங்கிருந்தபடி இந்தியாவிற்குள் ஊடுருவி வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே, பாலகோட் பகுதிக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் பாய்ந்து சென்று குண்டு வீசி தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு திரும்பி வந்தன.
அதிர்ச்சி வைத்தியம்
இதை பாகிஸ்தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த முற்பட்டது. அதை இந்திய விமானப்படை சிறப்பாக கையாண்டு விரட்டியடித்தது. இந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது பாகிஸ்தானுக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளது.
|
ஏவுகணைகள்
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா செக்டார் பகுதியில், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும், பீரங்கி குண்டுகளையும் இந்திய ராணுவம் வீசியுள்ளது.
பாகிஸ்தான் ராணு நிலைகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம், அவ்வப்போது ஜம்மு-காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவ வீரர்கள் மீதும், இந்திய மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறி வைத்து தாக்குதல்
இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, எங்கே இருந்து தாக்குதல் தொடுக்கப்படுகிறதோ, அந்தப் பகுதியை குறிவைத்து இந்தியா இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளன. அதில் இந்திய ராணுவம் வீசிய குண்டு விழுந்து அந்த பகுதியில் இருந்து மிகப்பெரிய புகைமூட்டம் கிளம்பும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மலையிலிருந்து கற்களும் சிதறுகின்றன. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் யாரேனும் பலியாகி உள்ளனரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
பதற்றம்
பாகிஸ்தான் தரப்பில் இது தொடர்பாக இன்னும் யாரும் விளக்கம் அளிக்காத நிலையில், செய்தி ஊடகமான ஏஎன்ஐ இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளது. ராணுவ வட்டாரங்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது. இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் எந்த மாதிரி எதிர்வினையாற்ற போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லையோர பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.