சிக்கிம் எல்லையில் சீன வீரர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தினம் கொண்டாடிய ராணுவ வீரர்கள்!
எல்லையில் போர்ப்பதற்றம் நிலவி வரும் சூழலில் சீன வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, ராணுவ வீரர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
டெல்லி: நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிக்கிம் நாதுலா எல்லையில் சீன வீரர்களுக்கு ராணுவ வீரர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். அப்போது இனிப்புகள் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வது வழக்கம்.
ஆனால், டோக்லாம் பகுதியில், இந்திய-சீன ராணுவத்தினர் மத்தியில் கடந்த 2 மாதங்களாக போர் பதற்றம் நீடிப்பதால் நேற்று அத்தகைய சந்திப்பு நிகழவில்லை. இது ராணுவ வீரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு பதிலாக, இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்பு பரிமாறிக்கொண்டனர். டோக்லாம் பகுதியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள நாதுலா எல்லையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதுபோல், உள்ளூர் மக்களுக்கும் இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கினர்.
எல்லையில், இனிப்புகள் வழங்கி சுதந்திரதின கொண்டாட்டம் நடந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.