கல்யாணம் ரெடி... மாப்பிள்ளை தான் பிகு பண்ணுகிறார்: கெஜ்ரிவாலைக் கிண்டலடிக்கும் குர்ஷித்
பரூக்காபாத்: அமெரிக்காவில் இந்தியத் தூதர் கைது செய்யப் பட்ட விதம் இந்தியாவை அவமதிப்பதாக இருக்கிறது என கருத்துத் தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். மேலும், டெல்லியில் ஆட்சி என்ற திருமணத்திற்கு எல்லா வேலைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆனால், மாப்பிள்ளையான ஆம் ஆத்மி கட்சி தான் பொறுப்பை ஏற்க மறுப்பதாகவும் நகைச்சுவையாக அவர் தெரிவித்துள்ளார்.
விசா மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கைது செய்யப் பட்டார் இந்தியாவின் துணைத்தூதர் தேவயானி கோப்ரகடே (வயது 39). கடந்த 12-ந்தேதி பொதுமக்கள் மத்தியில் வைத்து நடைபெற்ற இந்தக் கைது சம்பவத்தால் அமெரிக்க- இந்திய உறவில் விரிசல் உருவாகும் நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுதலையாகிவிட்ட போதிலும்கூட, இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலை, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்திடம், இந்தியப்பெண் தூதர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த குர்ஷித், ‘பொது இடத்தில் இந்திய துணைத்தூதர் கைது செய்யப்பட்டதை அவமதிப்பாகத்தான் கருதுகிறோம். இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை அமெ ரிக்காவுக்கு தெரிவித்துவிட்டோம். அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அமெரிக்காவின் பதில் கிடைத்தபின்னர் தேவையானதை செய்வோம்" என்றார்.
அதனைத் தொடர்ந்து, டெல்லியில் தொடரும் இழுபறி நிலை குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக குர்ஷித், ‘ஆம் ஆத்மி கட்சி மாப்பிள்ளையாக உள்ளது. திருமண ஏற்பாடு தயாராக இருக்கிறது. ஆனால் மாப்பிள்ளை பொறுப்பை ஏற்க மறுக்கிறார். திருமண வாழ்வின் சாராம்சத்தை புரிந்துகொள்வதற்காக அந்த மாப்பிள்ளைக்கு காங்கிரஸ் ஆதரவு அறிவித்திருக்கிறது" என நகைச்சுவையாகக் கூறினார்.