நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறியுள்ளது: மோடி பேச்சு
டெல்லி: 17 மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இருந்த நிலையைவிட இந்தியா தற்போது பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லியில் பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
அனைத்து வகை பொருளாதார குறியீடுகள் அடிப்படையிலும் இந்தியா முன்னேறி வருவது தெளிவாக தெரிகிறது. 17 மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இருந்த நிலையைவிட இந்தியா தற்போது வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளன. நடப்பு நிதி பற்றாக்குறை குறைந்துவிட்டது.
வங்கி நடைமுறையின்கீழ், நாட்டின் 190 மில்லியன் மக்களை கொண்டுவர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் வங்கி கணக்குகளில் ரூ.26000 கோடி பணம் இருப்பு உள்ளது.
உலக பொருளாதாரம் மோசமான சூழ்நிலையில் இருக்கும் இந்த நிலையிலும், தொடர்ச்சியான நல்ல பல திட்டங்களால் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
நிதி ஆயோகா என்ற அமைப்பு, திட்ட கமிஷனில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இது ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்படும்.
இவ்வாறு மோடி பேசினார்.