வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசு ஏற்கும் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு
வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
டெல்லி: தேர்தல் செலவுகளை தற்போது அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் செய்து வருகின்றனர். இதனால் தேர்தலுக்காக நிதி திரட்டுவது அதிகரித்து வருகிறது. இதுதவிர, அதிக பணத்தை தேர்தலில் செலவு செய்துவிட்டு அதை குறைத்து மதிப்பிட்டு காட்டுவதும் அரசியல் கட்சிகளின் வழக்கமாக உள்ளது.
அதே நேரம், 'அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே செய்து விட்டால் இந்த குற்றச்சாட்டுகள் எழாது. இதன் மூலம் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஒழிந்துவிடும். இதனால் ஊழல் இன்றி தேர்தலை நடத்த முடியும்' என்று மத்திய அரசு நம்புகிறது.
இது தொடர்பாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம், ஒப்புகை சீட்டு எந்திரம், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் சட்டம் மற்றும் பணியாளர்கள் மீதான பாராளுமன்ற நிலைக்குழு தேர்தல் ஆணையம் அதிகாரிகள், சட்ட அமைச்சக அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசித்தது.
தேர்தல் ஆணையம் எதிர்ப்பு
அப்போது அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்பது பற்றி கருத்து தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்தை நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டுக்கொண்டது. ஆனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கலாம் என்ற யோசனைக்கு தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு தேர்தல் கமிஷன் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்து உள்ளது.
மறுப்பு
அதில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் ஆதரிக்காது. ஏனென்றால், தேர்தல் செலவுக்கு பணத்தை அரசே ஒதுக்கீடு செய்துவிட்டால் வேட்பாளர்கள் செய்யும் சொந்த செலவுகளையும், அவர்களுக்காக மற்றவர்கள் செலவு செய்வதையும் தேர்தல் கமிஷனால் தடுக்க முடியாது.
தேர்தல் சீர்திருத்தம் தேவை
அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் தேர்தல் நிதி, அவர்கள் அதை செலவு செய்யும் விதம் ஆகியவற்றில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதையே தேர்தல் ஆணையம் விரும்புகிறது.
ஆன்லைன் ஓட்டு வேண்டாம்
சமீபகாலமாக ‘ஆன்லைன்' மூலம் வாக்களிக்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் தேர்தல் கமிஷனிடம் வைக்கப்பட்டு வருகிறது. இதையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.