ஹரியானா சாமியார் ராம்பால் நள்ளிரவில் அதிரடி கைது
ஹிசார்: ஹரியானா சாமியார் ராம்பால் அதிரடியாக நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் இருந்து 15 ஆயிரம் பேரை வெளியேற்றிய பிறகு, சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா மாநில அரசில் என்ஜீனியராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் சாமியார் ராம்பால் (வயது 63). அங்கு பர்வாலா என்ற இடத்தில் அமைந்துள்ள அவரது ஆசிரமம், ஒரு அரசாங்கம் போலவே இயங்கி வந்தது. சர்ச்சைகளில் சிக்கிய அவர், ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.
ஜாமீனில் வெளிவந்துள்ள, அவர் மீது பஞ்சாப், ஹரியானா நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கலானது. அதில் அவர் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்டு பிறப்பித்து, 21ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என ஹரியானா போலீசுக்கு ஹைகோர்ட்டு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஆசிரமத்தை சுற்றி வளைத்து சாமியாரை கைது செய்வதற்கு செவ்வாய்கிழமையன்று போலீஸ் படை அங்கு விரைந்தது.
போலீசார் மீது ஆசிரமத்திற்குள் இருந்து சாமியார் ஆதரவாளர்கள், அவரது ஆர்.எஸ்.எஸ்.எஸ். படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பெட்ரோல் குண்டுகளை வீசினர். சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. 200க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆசிரமத்தில் அடைபட்டிருந்த நிலையில், 5 பெண்கள், ஒரு குழந்தை என 6 பேர் உயிரிழந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சாமியார் ராம்பால், ஆசிரம செய்தி தொடர்பாளர் ராஜ்கபூர், முக்கிய நிர்வாகி புருஷோத்தம் தாஸ், அவரது ஆதரவாளர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே ஆசிரமத்தின் ஒருபகுதியை இடித்து உள்ளே நுழைந்த போலீசார் நள்ளிரவு வரை ராம்பாலை தேடினர். ராம்பால் ஆசிரமத்தில் இருந்து மொத்தம் 15ஆயிரம் பேரை போலீசார் வெளியேற்றினர்
சாமியாரின் ஆதரவாளர்கள் 275 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டதாக புருஷோத்தம் தாஸ், சாமியார் ராம்பாலின் மகன் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
ஆசிரம பகுதியில் தொடர்ந்து பதற்றமும் நிலவிய நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அங்கு துணை ராணுவத்தினர் 500 பேரை அனுப்பி வைத்தது.
இந்நிலையில், ஒரு வழியாக, சாமியார் ராம்பாலை துணை ராணுவத்தின் துணையுடன் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். ஆசிரமத்தில் இருந்த 15 ஆயிரம் பேரையும் வெளியேற்றி விட்டு இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். சாமியார் சரண் அடைய மறுத்ததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதைத் தொடர்ந்து, சாமியார் ஓர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சாமியார் ராம்பால், இன்று ஹிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.