ஹலோ பிலாவல்.. பாகிஸ்தான் ரயில்வே வெப்சைட்டில் புகுந்து கலாய்த்த இந்திய ஹேக்கர்!
டெல்லி: பாகிஸ்தான் ரயில்வேயின் இணையதளத்தை இந்திய ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்து காஷ்மீர் குறித்த பாகிஸ்தானியர்களின் கருத்தைக் கிண்டலடித்துக் கமெண்ட் போட்டதால் சலசலப்பு பாகிஸ்தானில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வாலாட்டி வருகிறது. இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இணையதளங்கள் மூலமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளது. மாறி மாறி இரு நாட்டு இணையதளங்களையும் ஹேக்கர்கள் ஹேக் செய்து களேபரப்படுத்தி வருகின்றனர்.
ரயில்வே இணையதளம்
பாகிஸ்தான் ரயில்வேயின் இணையதளத்தை ஹேக் செய்து அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஷுக்ரின்
Zukr@in என்ற பெயரில் இந்த ஹேக்கர் விஷமம் செய்துள்ளார். ஹேக் செய்யப்பட்ட ரயில்வே இணையதளத்தில், அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவைக் கிண்டலடித்து போஸ்ட் போட்டுள்ளார்.
ஏன் பிலாவலுக்கு குறி
சமீபத்தில் பிலாவல் பூட்டோ கூறுகையில், காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர்ப்பேன் என்று கூறியிருந்தார். பிலாவல் பூட்டோ, மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் ஆவார். இதனால்தான் பிலாவலைக் குறி வைத்துள்ளார் அந்த இந்திய ஹேக்கர்.
அதுக்கெல்லாம் நீ லாயக்கில்லை தம்பி...!
அந்த ஹேக்கர், என்ன பிலாவல் பூட்டோ, உனக்கு காஷ்மீர் வேண்டுமா.. உன்னால் முதலில் பாகிஸ்தானையே ஆள முடியவில்லை. பிறகு காஷ்மீர் எப்படி கிடைக்கும். கனவுதான் காண முடியும் என்று கூறியுள்ளார் அந்த ஹேக்கர்.
ஒருபோதும் கிடைக்காது
மேலும் அவர் கூறுகையில் ஒருபோதும் பிலாவல் பூட்டோவுக்கு காஷ்மீர் கிடைக்காது. மீண்டும் காஷ்மீர் வேண்டும் என்று கேட்டால் நான் உன் நாட்டையே அழித்து விடுவேன் என்றும் அந்த ஹேக்கர் மிரட்டியுள்ளார்.
2வது முறை
பாகிஸ்தான் ரயில்வே இணையதளம் ஹேக் செய்யப்படுவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பிளாக் டிராகன் இந்தியன் ஹேக்கர் ஆன்லைன் ஸ்குவாட் என்ற பெயரில் ஹேக் செய்தனர். அப்போது ஹலோ, பாகிஸ்தான் குடிமக்களே, இந்த தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
செப்டம்பரில் விஷமமாக பேசிய பிலாவல்
கடந்த செப்டம்பர் மாதம் பிலாவல் பூட்டோ பேசுகையில், ஒட்டுமொத்த காஷ்மீரையும் இந்தியாவிடமிருந்து பறித்து பாகிஸ்தானுடன் சேர்ப்பேன் என்று கூறியிருந்தார். இதற்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்தன. மத்திய அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.