அடுத்த அதிரடி.. பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
ஸ்ரீநகர்: தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா அவசரமாக டெல்லி அழைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர், சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த பஸ் மீது நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூடியது. அதில் பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கப்பட்ட அதிக ஃபேவரைட் நாடு என்ற வணிக அந்தஸ்து ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. பின்னர் பொது விழா ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவத்திற்கு பதிலடி தர முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனிடையே, பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதர், அஜய் பிசாரியா, டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவரிடம், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்படும் என தெரிகிறது.