ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியிலிருந்து மீண்ட 2 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
ஐதராபாத்: லிபியாவில் ஐ.எஸ். பிடியில் பிணைக்கைதியாக இருந்து மீண்ட இந்தியர்கள் இருவர் இன்று காலை பத்திரமாக தாயகம் திரும்பினர்.
சிரியா, ஈராக் நாடுகளில் பல மாகாணங்களை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இங்கு கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் லிபியாவில் சிர்தே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்திய பேராசிரியர்கள் 4 பேர் அண்டை நாடான துனிஷியா சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடிவு செய்தனர்.
இதற்காக 4 பேரும் கடந்த 29-ந்தேதி ஒரு பேருந்தில் தலைநகர் திரிபோலி நோக்கி வந்தனர். அப்போது, ஒரு சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் அவர்களை கடத்திச் சென்றனர்.
இந்நிலையில், அவர்களில் இருவர் மட்டும் விடுவிக்கப்பட்டனர். அந்த இருவரும் இன்று காலை துபாயில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்.
ஐ.எஸ். பிடியில் இருந்து மீண்ட லக்ஷ்மிகாந்த் ராமகிருஷ்ணன்
செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடந்த 29-ம் தேதியன்று நான்,
விஜயகுமார், கோபிகிருஷ்ணா, பல்ராம் ஆகிய நால்வரும்
கடத்தப்பட்டோம்.
எங்கள் நால்வரையும் ஒரே இடத்தில் தான் வைத்திருந்தினர். நாங்கள் எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாகவில்லை. எங்களை அவர்கள் மரியாதையுடனேயே நடத்தினர். நானும் விஜயகுமாரும் விடுதலையானது போல் மற்ற இருவரும் பத்திரமாக விடுதலையாக வேண்டும் என விரும்புகிறோம்.
ஐ,எஸ். பிடியில் உள்ள அவர்கள் இருவரும் பத்திரமாக இருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என ஐ.எஸ். தீவிரவாதிகள்என்னிடம் உறுதியளித்தனர்.
மேலும், என்னிடம் ஒரு பிரத்யேக தொலைபேசி எண்ணை அளித்துள்ளனர். அதில் அவ்வப்போது தொடர்பு கொண்டு அவர்கள் பிடியில் இருக்கும் இருவரது நிலையையும் அறிந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
எனவே இந்தியர்கள் கடத்தல் குறித்த செய்திகளை ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் வெளியிட வேண்டும்" என்றார்.
லக்ஷ்மிகாந்த் ராமகிருஷ்னாவின் தந்தை விடுவிக்கப்பட்டது பற்றி கூறுகையில், "ஆசிரியர்கள் என்று தெரிந்ததும் அவர்கள் விடுவித்தாகவும், தவறுதலாக கடத்தியாக கூறினர் என்றும் ராமகிருஷ்ணா தன்னிடம் தெரிவித்தார்" என்று
கூறியுள்ளார்.