அடுத்த 6 மாதமும் வனவாசம்தான்...வேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்
டெல்லி: இந்திய ஐடி நிறுவனங்கள் சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகள், அடுத்த 6 மாத காலத்துக்கும் மந்தமாகவே இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் கடும் வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில்,பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றியும் வருகின்றன.
இது போதாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைகள் இந்திய அப்பாவி ஐடி ஊழியர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஹெச்-1 பி விசா பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் ஐடி ஊழியர்களுக்கும், இந்தியாவில் இயங்கும் ஐடி நிறுவங்களின் ஊழியர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட இந்திய முன்னணி ஐடி நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ், காக்னிசன்ட் போன்றவை ஹெச்-1 பி விசா விசா மூலம் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் செய்துள்ளதாக அமெரிக்கா புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்துள்ளது. இந்த நிலையில் எக்ஸ்பெரிஸ் ஐடி மேன்பவர் குரூப் இந்தியா என்ற தனியார் நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.
அதில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த அரையாண்டு காலத்திற்கு வெளிநாட்டு ஐடி பணிகளுக்கு இந்திய ஐடி நிறுவனங்களிலிருந்து ஊழியர்கள் தேர்வு செய்வதில் தேக்கம் நிலவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆட்குறைப்பும் செய்வதிலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்குவதிலும் இந்திய ஐடி நிறுவனங்கள் ஈடுபடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.