ஐ.டி. துறையினருக்கு ஒரு நல்ல செய்தி... காத்திருக்கும் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
இந்திய ஐ.டி. துறையினருக்கு வரும் ஆண்டில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: நடப்பு 2017-18ம் ஆண்டில் ஐடி துறையில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது. அதன்மூலம் ஒன்றரை லட்சம் ஐ.டி. துறையினர் புது வேலை பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய மென்பொருள் கூட்டமைப்பான நாஸ்காம், 2017-18 ஆண்டில், வெளிநாட்டு ஐடி துறையில் சுமார் 7-8 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும், உள்ளூர் ஐடி சந்தைகள் சுமார் 10-11 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 2017-18 ஆண்டில் ஐடி-பிபிஎம்., துறைகளில் 1.3 லட்சம் முதல் 1.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது நாஸ்காம் . இது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் கூறுகையில், 'ஐடி துறையில் இந்திய பங்குகள் சீராக இருப்பதோடு, வளர்ச்சியும் கண்டுள்ளது.' என்றார்.
150 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்திய ஐடி சந்தையின் வருமானம், பிபிஎம், மென்பொருள் சேவைகள், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்டவற்றையே பெருமளவு நம்பியுள்ளது. மேலும், இவை பெருமளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திறன்வாய்ந்த பணியாளர்களுக்கு ஐடி துறையில் இன்றளவும் பற்றாக்குறை நிலவுகிறது.