2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட ஐவருக்கு அறிவிப்பு
மணிலா: 2019-ம் ஆண்டிற்கான ரமோன் மாக்சேசே விருதை இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் வென்றுள்ளார். ரமோன் மாக்சேசே விருது ஆசியாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது.
ரமோன் மக்சேசே விருது ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் பொறுப்பாளர்களால் 1957-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டு அரசின் அனுமதியுடன் அந்நாட்டு முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை எடுத்துரைக்க இவ்விருது ஏற்படுத்தப்பட்டது.
மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மக்சேசேவின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பொது சேவை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல் பண்புகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, விருது வழங்கப்படுகிறது.
இது ஆசியாவின் நோபல் பரிசு என அறியப்படுகிறது. என்.டி.டி.வி இந்தியாவின் மூத்த நிர்வாக ஆசிரியராக இருக்கும் ரவீஷ் குமார், இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தொலைக்காட்சி பத்திரிகையாளர்களில் ஒருவராக திகழ்வதாக ரமோன் மாக்சேசே விருது வழங்கும் அமைப்பு கூறியுள்ளது.
மேலும் தற்போது விருது வென்றவர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவரான ரவீஷ் குமாரின் பிரைம் டைம் நிகழ்ச்சியானது, யதார்த்த வாழ்க்கை, அது சார்ந்த சாதாரண மக்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விரிவாக கையாண்டு உலகிற்கு எடுத்துரைக்கிறது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
மானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயிரிடுவதில் ஆர்வம்
சாதாரண பொதுமக்களின் குரலாக ஒலிக்க துவங்கினால் நீங்களும் கூட ஒரு பத்திரிகையாளரே என்றும் விருதை அறிவித்துள்ள அமைப்பு தெரிவித்துள்ளது.
2019 ரமோன் மாக்சேசே விருதை வென்ற மற்ற நான்கு பேர் மியான்மரைச் சேர்ந்த கோ ஸ்வீ வின், தாய்லாந்தைச் சேர்ந்த அங்கானா நீலபாய்ஜித், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரேமுண்டோ புஜாண்டே கயாபியாப் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜாங்-கி ஆகியோர் ஆவர்.