”இந்தியாவின் மகள்” ஆவணப்படத்திற்கு பதிலடியாக “இங்கிலாந்தின் மகள்”... சர்ச்சையைக் கிளப்பிய இந்தியர்!
டெல்லி: டெல்லி பாலியல் வன்முறையின் சான்றாக வெளிவந்த "இந்தியாவின் மகள்" திரைப்படத்திற்கு பதிலடியாக "இங்கிலாந்தின் மகள்" என்ற ஆவணப்படமொன்றினைத் தயாரித்து சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளார் இந்தியர் ஒருவர்.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் பேருந்தில் தனியாக பயணம் செய்த மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார்.
அக்கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட அம்மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் பலத்த போராட்டத்தினை முடுக்கி விட்டது.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் பின்னர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில் இக்கொடூர சம்பவத்தினை மையப்படுத்தி இங்கிலாந்தினைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளரான லெஸ்லீ உத்வின் மற்றும் பிபிசி-4 செய்தி ஊடகக் குழுவினர் இணைந்து "இந்தியாவின் மகள்" என்ற ஆவணப்படத்தினைத் தயாரித்தனர்.
இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியானது.இதை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது ஆனால் உலகம் முழுவதும் இந்த ஆவணப் படம் வெளியானது.
இந்தியாவிலேயே இப்படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகின்ற நிலையில், இந்திய ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது என்று இப்படத்திற்கு பதிலடியாக "இங்கிலாந்தின் மகள்" என்ற பெயரில் இந்தியரான ஹர்வீந்தர் சிங் என்பவர் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதில் மேற்கு நாடுகளின் பாலியல் பலாத்கார சம்பவங்களை தோலுரித்துள்ளார்.
இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பெண்கள் தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர் என்கிறார் ஹர்வீந்தர் சிங்.
இங்கிலாந்திலும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்கு காரணம் பெண்கள்தான் என்று மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருதுகின்றனர்.
அங்கு பெண்கள் கொலை செய்யப்படும் விகிதம் குறைவாக இருந்தாலும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையினைத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.