ரோஹித் வெமுலா தற்கொலையும் ஊடகங்களில் "தலித்"துகள் நிலையும்
டெல்லி: ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் ஜாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து ஆங்கில ஊடகங்கள் கவனம் செலுத்தாததும் தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு ஒரு காரணமாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ரோஹித் வெமுலாவின் தற்கொலையைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் கிளர்ச்சிகளுக்கும் கூட மிகப் பெரிய அளவில் ஊடகங்களால் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. அதற்கு ஊடகங்களில் தலித் சமூகத்தினர் பெரிய பதவிகளில் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் அசோசியேட் எடிட்டர் பிரஷாந்த் ஜா ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆங்கில ஊடகங்களில் "தலித்" சமூக பத்திரிகையாளர்களின் நிலை தொடர்பாக இடம்பெற்றுள்ள சில விவரங்கள்:
- 1996ஆம் ஆண்டு "தலித் பத்திரிகையாளர்களைத் தேடி" என்ற தலைப்பில் பத்திரிகையாளர் பி.என். உனியால் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் கடந்த 30 ஆண்டுகளாக ஊடகங்களில் ஒரே ஒரு தலித் பத்திரிகையாளரைக் கூட சந்திக்க முடியவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் பிரிவான பி.ஐ.பி. கொடுத்துள்ள அடையாள அட்டை விவரங்கள் அடிப்படையில் தேடியபோது இந்தியாவின் பிரதான ஆங்கில பத்திரிகைகளில் ஒரு தலித் பத்திரிகையாளரைக் கூட காண முடியாததாக இருந்தது.
- 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006ஆம் ஆண்டு சமூக அறிவியலாளர் யோகேந்திர யாதவ் மற்றும் மீடியா ஸ்டடி குரூப்பின் அனில் சமதியா ஒரு சர்வே நடத்தினர்.
- தொலைக்காட்சிகள் உள்பட மொத்தம் 37 முன்னணி ஊடகங்கள் இந்த சர்வேக்குட்படுத்தப்பட்டன.
- 37 முன்னணி ஊடகங்களில் டாப் 10 பதவிகளில் ஒரு தலித் பத்திரிகையாளர் கூட இடம்பெற்றிருக்கவில்லை.
- மீடியா ஸ்காலர் ராபின் ஜெஃப்ரி இந்தியாவின் பிராந்திய மொழி பத்திரிகைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
- இந்தியாவின் 20 நகரங்களில் 250க்கும் மேற்பட்டோரிடம் ஜெஃப்ரி நேர்காணல் நடத்தினார்.
- இது பற்றி குறிப்பிடுகிற ஜெஃப்ரி, தாம் ஒரு தலித் பத்திரிகையாளரை கூட சந்தித்தது இல்லை என்கிறார்.
- இந்தியாவின் முன்னணி தேசிய பத்திரிகை, டிவி சேனல்களில் எடிட்டராக ஒரு தலித்தோ பழங்குடியினத்தவரோ இல்லை என்கிறார் மீடியா ஸ்டடி குரூப்பின் அனில் சமதியா.
இப்படியான நிலை இருக்கும்போது தலித்துகள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை ஒரு தேசிய அளவிலான விவாதமாக எப்படி கொண்டு செல்ல இயலும் என்ற கேள்வியையும் இந்த கட்டுரை முன்வைக்கிறது.