ஐஎஸ், அல் கொய்தாவுடன் கைகோர்த்துள்ள இந்தியன் முஜாஹிதீன்.. "அலர்ட்" ஆகும் உளவு அமைப்புகள்!
டெல்லி: மிகவும் அபாயகரமான அளவில் ஆழ வேரூண்றி வருகிறது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு உருவெடுத்துள்ளது.
ஆரம்பத்தில் இது இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) பிரிவாகவே இருந்தது. ஆனால் இன்று இது இந்தியாவின் மிகவும் அபாயகரமான தீவிரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய இஸ்லாமிய காப்பாளராக இது இன்று தன்னைக் காட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் மட்டுமல்லாமல் பர்மாவின் ரோஹிங்கியா முஸ்லீ்ம் அமைப்புக்கும் சேர்த்து ஆள் திரட்டிக் கொடுக்கும் வேலையில் இது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான வாகா எல்லைப் பகுதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் தொடர்புடைய ஜுந்தல்லா தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளிலும் கூட இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிழல் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை நிறுவியவரான யாசின் பத்கதல், தனது அமைப்பை தனித்துவம் கொண்டதாக வளர்க்க முடிவு செய்தபோதே, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் துணையையும் சேர்த்து உதறி விட்டார்.
காரணம், ஐஎஸ்ஐ தனக்கென்று ஒரு கொள்கையை வைத்திருப்பதாகவும், அது இஸ்லாமியர்களின் உயர்வுக்கு உதவுவதில்லை என்பதும் யாசின் பத்கலின் குற்றச்சாட்டாகும்.
மேலும் தங்களை ஐஎஸ்ஐ சொந்த லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் நினைத்ததாக, யாசின் பத்கலிடம் தேசிய புலனாய்வு இயக்கமான என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணையாளர்களிடம் யாசின் பத்கல் கூறுகையில், " ஐஎஸ்ஐ அமைப்பானது எங்களை தங்களது சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்ட பன்றிக் கூட்டமாகும். அவர்களுக்கு என்று சில விருப்பங்கள், நோக்கங்கள் உள்ளன. அதற்காக மட்டுமே எங்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
எங்களது அமைப்பைச் சேர்ந்த ரியாஸ் பத்கல், அழகான பெண்களை மணந்து கொண்டு கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் நாங்கள் இங்கே நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதும், வைப்பதுமாக இருந்தோம் என்றார் யாசின் பத்கல்.
இந்தியன் முஜாஹிதீன் போராளிகள் பலர் அடுத்தடுத்து நாட்டின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்ட பிறகுதான் அவர்களது இயக்கத்தின் பிரிவுகள் நாடு முழுவதும் இருப்பது தெரிய வந்தது.
ஆனால் இவர்களுக்கு சர்வதேச அளவில் தொடர்புகள் இருப்பதை பாதுகாப்புத்துறையினர் சரியாக கண்டுபிடிக்காமல் விட்டு விட்டனர். இவர்களது நோக்கம் பெரியது என்பதையும் உணராமல் விட்டு விட்டனர்.
இந்த ஒட்டுமொத்த தீவிரவாத நபர்களிலும் முக்கியமானவர் சுல்தான் அகமது அர்மார் என்பவர். இவர் கர்நாடக மாநிலம் பத்கல் நகரைச் சேர்ந்தவர். இவர்தான் அல் கொய்தாவுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ஆள் பிடித்துக் கொடுப்பவர்.
இவரது நோக்கம் மிகத் தெளிவானது. இவர் ஒரே நேரத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடனும் நெருக்கமாக இருப்பார். அதேசமயம் அல் கொய்தாவையும் விட்டுக் கொடுக்க மாட்டார். இவருக்கு யார் யாருக்கு என்ன மாதிரியான ஆட்கள் தேவை என்பது தெளிவாகத் தெரியும். என்பதால் அதை அவர் திட்டமிட்டு செய்து கொடுத்து வந்துள்ளார்.
தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் அவர் பலரைத் தேர்வு செய்துள்ளார். தென்னகத்தில் பல இளைஞர்களை இவர்தான் இந்த தீவிரவாத அமைப்புகளுக்காக அனுப்பிவைத்தவர். வட இந்தியாவில் அல் கொய்தாவுக்காக 30 பேரை அனுப்பி வைத்துள்ளார்.
தற்போதைக்கு ஐஎஸ்ஐஎஸ்ஸும், அல் கொய்தாவும் இணைந்து செயல்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் இரண்டும் இணையலாம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு கருதுகிறது. மேலும், தற்போது சிரியா, ஈராக்கில் நடந்து வரும் போர் விரைவில் ஆப்கானிஸ்தானுக்கு இடம் மாறும் என்றும் அந்த அமைப்பு கருதுகிறது.
முதலில் சுல்தான் அர்மார், ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு மட்டுமே ஆட்களைத் தேர்வு செய்து வந்தார். இவர் இந்தியாவுக்கு வெளியே இருந்தபடி செயல்படுவதாக என்ஐஏ தகவல்கள் கூறுகின்றன. அதிக அளவிலான இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ப்பதில் இவர் உறுதியாக இருந்தார் என்று ஐபி தகவல் கூறுகிறது.
அதேசமயம், ஒரு மாதத்திற்கு முன்பு அர்மார் குறித்த இன்னொரு உளவுத்துறை தகவலில், அவர் அல் கொய்தாவுக்கும் நிறைய ஆட்களை அனுப்பி வைத்தார் என்று கூறுகிறது.
தனது சொந்த ஊரான பத்கலிலிருந்து பலரை இவர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு தீவிரவாத அமைப்புடனும் அது நல்லுறவைப் பேணி தன்னைப் பலப்படுத்த இந்தியன் முஜாஹிதீன் முயல்வது உறுதியானது.
தற்போது சுல்தான் அர்மார்தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அவர் ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு ஆட்களை அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அல் கொய்தாவுக்கு இவர் ஆட்களை அனுப்ப ஆரம்பித்துள்ளார்.
வாகா எல்லையில் தாக்குதல் நடத்திய ஜுந்தல்லா அமைப்பானது ஆரம்பத்தில் ஷியா முஸ்லீம்களுக்கு எதிரான சன்னி முஸ்லீம்களுக்கு ஆதரவாக ஈரானில் போராட்டம் நடத்தவே உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இது ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் கை கோர்த்தது. பின்னர் பாகிஸ்தானுக்கு திரும்பியது.
இந்த அமைப்புக்கு முதலில் தெஹரிக் இ தலிபான் அமைப்பின் தலைவரான ஹக்கீமுல்லா மெசூத்தான் தலைவராக இருந்தார். அவரது மரணம் வரை அவர்தான் தலைவராக இருந்து வந்தார். இது அல்கொய்தா, தலிபான் மற்றும் அல் கொய்தாவின் 313 பிரிகேட் மற்றும் இந்தியன் முஜாஹிதீன் ஆகியவற்றின் கூட்டு இயக்கமாகும். சன்னி முஸ்லீம்கள் எப்போதும் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே இதன் ஒரே நோக்கமாகும்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூட ஷியாக்களுக்குஎதிராகத்தான் போராடி வருகிறது. இதன் காரணமாகவே ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் ஜுந்தல்லா அமைப்பு கை கோர்த்தது. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட டேவிட் கோல்மேன் ஹட்லியையும் கூட ஜூந்தல்லா அமைப்புதான் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்புகளுக்கு எதிராக தற்போது இந்திய உளவு அமைப்புகள் நீண்ட காலத் திட்டம் போட்டு செயல்பட வேண்டிய நிலையில் உள்ளன. இந்த தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் எதிர்காலத்தி்ல ஒன்றாக சேர்ந்து செயல்படும வாய்ப்புகள் உள்ளன என்பதால் இவற்றை சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பில் உளவு அமைப்புகள் உள்ளன.