இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ நிதியுதவி செய்தது: யாசின் பட்கல்
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் அண்மையில் இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட அவனிடம் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு, புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்புகளில் தனக்கு பங்கு உள்ளதை யாசின் ஒப்புக் கொண்டான். இந்நிலையில் அவனது அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ நிதி உதவி செய்தது என்று யாசின் தெரிவித்துள்ளான்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இந்தியாவில் உள்ள தீவிரவாத அமைப்பு, அதற்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லை என்று ஐஎஸ்ஐ இத்தனை நாட்களாக கூறி வந்தது. ஆனால் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை ஐஎஸ்ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக யாசின் தெரிவித்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.