சூரத்தில் அணுகுண்டு வீசத் திட்டமிட்ட இந்தியன் முஜாஹிதீன்.. யாசின் பத்கல் பரபரப்பு தகவல்
டெல்லி: சூரத் நகரில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு விரும்பியதாகவும், அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வந்ததாகவும் அதன் தலைவரான அகமது ஜரார் சித்திபப்பா என்ற யாசின் பத்கல் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் பத்கல்.
இந்த அணுகுண்டுவெடிப்பை தானே நிகழ்த்த திட்டமிட்டு வந்ததாகவும் பத்கல் தெரிவித்துள்ள தகவல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.
பொக்ராவில் பிடிபட்ட பத்கல்
ஆகஸ்ட் 27ம் தேதி நேபாள நாட்டின் பொக்ரா என்ற இடத்தில் வைத்துப் பிடிபட்டார் பத்கல். அவர் தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணை வளையத்தில் உள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், பல்வேறு மாநில காவல்துறையினர் தொடர்ந்து மாறி மாறி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்ன குண்டை அனுப்ப முடியுமா...
விசாரணையின்போது பத்கல் கூறுகையில், பாகிஸ்தானில் உள்ள எனது அமைப்பின் தலைவர் ரியாஸ் பத்கலைத் தொடர்பு கொண்டு சின்ன சைஸ் அணுகுண்டை ஏற்பாடு செய்து தர முடியுமா என்று நான் கேட்டிருந்தேன். பாகிஸ்தானில் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் என்று அதற்கு ரியாஸ் பதிலளித்தார்.
சூரத்தில் குண்டு போட வேண்டும்
அதற்கு நான் எனக்கு சின்னதாக ஒரே ஒரு குண்டு வேண்டும். அதை சூரத்தில் போட விரும்புகிறேன் என்று கூறினேன். ரியாஸ் அதற்கு, அணுகுண்டுகளை ஏற்பாடு செய்வது சுலபம்தான் என்று கூறியிருந்தார்.
ஆனால்.. முஸ்லீம்களும் மரணிப்பார்களே...
இருப்பினும் இந்தத் தாக்குதலால் முஸ்லீம்களும் உயிரிழப்பார்கள் என்று ரியால் கூறினார். அதற்கு நான், குண்டு போடுவற்கு முன்பு, முஸ்லீம்கள் தங்களது குடும்பத்தினருடன் நகரை விட்டு வெளியேறி விடுமாறு எச்சரித்து மசூதிகளில் போஸ்டர்கள் ஒட்டி எச்சரிப்பதாக உறுதியளித்தேன்.
திட்டம் நிறைவேறவில்லை
ஆனால் இந்தத் திட்டம் நிறைவேறுவதற்குள்ளாகவே நான் கைதாகி விட்டதால் நிறைவேற முடியாமல் போய் விட்டது என்று கூறியுள்ளார் யாசின் பத்கல்.
சூரத் மீது நீண்ட நாட்களாகவே குறி வைத்த யாசின்
சூரத்தை நீண்ட நாட்களாகவே குறி வைத்து வந்துள்ளார் யாசின் பத்கல். மேலும், டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட 27 வெடிகுண்டுகளை இந்த ஊரில் வைத்துத்தான் அதீப் அமீன் என்பவரின் உதவியுடன் தயாரித்தார் யாசின் பத்கல்.
வெடிகுண்டு நிபுணர்
யாசின் பத்கலே ஒரு வெடிகுண்டு நிபுணர்தான். இவர் மிகச் சிறந்த முறையில் வெடிகுண்டுகள் தயாரிப்பவர் என்பதால், இவர் கைதானதால் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறதாம்.
ராணுவ பயிற்சி
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு கிட்டத்தட்ட ராணுவத்திற்கு வழங்கப்படுவது போல சகல விதமான பயிற்சிகளையும் பாகிஸ்தானில் வைத்து அளிப்பதாகவும் யாசின் பத்கல் தெரிவித்துள்ளார். அதி நவீன பயிற்சிகளையும் தங்களது அமைப்பினருக்கு அளிப்பதாகவும் கூறியுள்ளார் யாசின்.
50 நாட்களுக்குள்
எந்தவிதமான பயிற்சியாக இருந்தாலும் 50 நாட்களுக்குள் அந்த பயிற்சி முகாம் முடியுமாம். அதற்குள் அனைத்து விதமான ஆயுதங்கள், வெடிபொருட்கள், வெடிகுண்டுகளைக் கையாளும் திறமையை கற்றுக் கொடுத்து விடுவார்களாம்.