மரணம் மிரட்டிச் சென்ற நிமிடம்.. உயிர் காத்த சான்ட்ரா.. மோஷேவின் மறக்க முடியாத 26/11
Recommended Video
மும்பை: இஸ்ரேல் சிறுவன் மோஷேவின் மும்பை வருகை அவருக்குள் என்ன மாதிரியான உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை முழுமையாக நம்மால் உணர முடியவில்லை. காரணம், மும்பையில் அவர் உயிர் தப்பியபோது அவருக்கு வயது 2தான்.
மோஷே இந்த நிமிடம் உயிருடன் இருக்க முக்கியக் காரணம் 46 வயதான சான்ட்ரா சாமுவேல்தான். கோவாவைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண்மணி. மோஷேவின் தந்தை நடத்தி வந்த கலாச்சார மையத்தில் இவர் அவர்களுடன் தங்கி கைக்குழந்தையான மோஷேவைப் பார்த்துக் கொண்டவர்.
பெற்றோரை விட அதிக நேரம் சான்ட்ராவுடன் செலவிட்டதால் மிகுந்த ஒட்டுதலுடன் மோஷே சான்ட்ராவிடம் இருந்தார். கசாப் தலைமையிலான பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் புகுந்து வேட்டையாடியபோது மோஷேவை மிகுந்த சிரமப்பட்டுக் காப்பாற்றினார் சான்ட்ரா. தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார்.
மோஷேவின் மறக்க முடியாத நிமிடங்கள்
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் நரிமன் முனைப் பகுதியில் உள்ள சபத் ஹவுஸ் யூத மையத்தைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தினர். சம்பவம் நடந்தபோது கீழ்த் தளத்தில் இருந்தார் சான்ட்ரா. மேல் தளத்தில் மோஷே தனது பெற்றோர் உள்ளிட்டோருடன் இருந்தார். மேல் தளத்தில் இருந்த அனைவருமே சுட்டுக் கொல்லப்பட்டனர். மோஷே மட்டும் உயிர் தப்பினார்.
தைரியமாக காப்பாற்றினார்
பெருத்த தாக்குதலின்போதும் கூட சான்ட்ராதப்பி ஓட முயற்சிக்கவில்லை. மாறாக அவரது நினைப்பு முழுவதும் மோஷே மீதே இருந்தது. மோஷேவின் அழுகுரல் அவரை பதறி வைத்தது. துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்ததும் மேலே சென்று பார்த்த அவர் பதறிப் போனார். ரத்த வெள்ளத்திற்கு மத்தியில், இறந்து கிடந்த உடல்களுக்கு இடையே மோஷே அழுது கொண்டிருந்தான்.
மீட்டு வந்தார்
மோஷேவின் சத்தம் தீவிரவாதிகளுக்குக் கேட்டு விடாமல் மிகுந்த புத்திசாதுரியத்துடன், பத்திரமாக மீட்டு வந்தார் சான்ட்ரா. அவரது தீரமான செயல் உலக அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு மோஷேவுக்கு சான்ட்ராதான் எல்லாமுமாக மாறினார். பெற்றோரை இழந்த மோஷே வேறு யாரிடமும் போகவில்லை. சான்ட்ராவிடம் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தான்.
இஸ்ரேலிய குடி்யுரிமை
மோஷேவின் தாத்தா வந்து மோஷேவை இஸ்ரேலுக்குப் பின்னர் அழைத்துச் சென்றார். ஆனால் இப்போது சான்ட்ரா பெயரைச் சொல்லி அழுது அவரைக் காணத் துடித்தான் மோஷே. இதனால் சான்ட்ராவுக்கு இஸ்ரேல் அரசு கெளரவக் குடியுரிமை கொடுத்து அவர் இஸ்ரேலிலேயே வந்து மோஷேவுடன் வசிக்க அனுமதி அளித்தது.
தற்போது மோஷேவுடன் சான்ட்ராவும், மோஷேவின் தாத்தாவும் உடன் வந்துள்ளனர். மறக்க முடியாத தருணங்கள் மோஷேவுக்கு மட்டுமல்ல, சான்ட்ராவுக்கும்தான்.