ஆணாக இருந்து பெண்ணாய் மாறியதற்காக டிஸ்மிஸ்.. வழக்கு போடப்போவதாக சீறும் கடற்படை கேப்டன்
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மணீஷ் குமார் கிரி என்ற நபர் கடற்படை பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் மாலுமியாக வேலை செய்கிறார் மணீஷ் குமார்.
இவர் விடுமுறையில் வீட்டுக்குச் சென்ற போது யாருக்கும் தெரியாமல் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியுள்ளார்.
இவரது செயலில் சந்தேகப்பட்டு அதிகாரிகள் இவரைச் சோதனைச் செய்தனர். உண்மை வெளியானதால் இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மாலுமியாக வேலை செய்த மணீஷ் குமார்
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் குமார் கிரி. 25 வயது நிரம்பிய இவர் கடந்த 7 வருடங்களாக இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டில் இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.என்.எஸ். இக்ஸிலா கடற்படை தளத்தில் மாலுமியாக பணியில் சேர்ந்தார். மிகவும் நன்றாக பணியாற்றும் இவர் முக்கியமான மாலுமியாக திகழ்ந்தார்.
பெண்ணாக மாறிய மணீஷ் குமார்
இந்த நிலையில் இவர் கடந்த வருடம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். சொந்த ஊரில் இருந்து சில காலம் மும்பைக்கும் சென்று தங்கியுள்ளார். மும்பை சென்றிருந்த மணீஷ் குமார் அங்குள்ள ஒரு தனியார் மருத்துமனையில் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியுள்ளார். நீண்ட நாட்களாகவே இவருக்கு இந்த விருப்பம் இருந்தது தெரியவந்துள்ளது.
மணீஷ் குமார் மீது சோதனை
இந்த நிலையில் விடுமுறை முடித்து வேலைக்குத் திரும்பினார் மணீஷ் குமார். ஆனால் இவரது நடவடிக்கைகளில் கடற்படை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வேலை தவிர்த்து மற்ற நேரங்களில் இவர் பெண்களின் உடையை அணிந்துள்ளார். அதேபோல் இவரது பேச்சும் பெண்ணின் குரலாக மாறியுள்ளது. இதையடுத்து சந்தேகம் அடைந்து இவரை அதிகாரிகள் உடல் பரிசோதனை செய்தனர். அப்போது இவர் பெண்ணாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டது.
|
மணீஷ் குமார் கிரி ஆவேசம்
இதையடுத்து இவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இது குறித்து பேசிய போது மணீஷ் குமார் கிரி மிகவும் வருத்தப்பட்டார். மேலும் பெண்ணாக மாறுவதில் எந்தக் குற்றமும் இல்லை, இந்தப் பணி நீக்கத்தை எதிர்த்து நான் வழக்கு தொடுப்பேன். நான் மிகவும் நன்றாக வேலை செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.