மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பற்படையின் ‘ருக்மணி’...
கடந்த சனிக்கிழமையன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.
அந்த விமானத்தில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் பயணம் செய்தனர். முதலில் அவ்விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், விமானத்தின் பாகங்கள் எதுவும் சிக்காத நிலையில் விமானத்தில் போலி மற்றும் திருட்டு பாஸ்போர்ட்டில் நான்கு பேர் பயணம் செய்தது அம்பலமானது.
அதைத் தொடர்ந்து மாயமான விமானம் கடத்தப் பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் செல்போன் தொடர்ந்து இயங்குவதாகவும், அவ்விமானம் மாயமாவதற்கு முன்னர் மலாக்கா ஜலசந்தி அருகே மாயமானதும் நேற்று தெரிய வந்தது.
இதையடுத்து மலேசியாவின் மேற்கு கடற்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையும் விமான மீட்பு பணியில் இணைந்துள்ளது.
காணாமல் போன விமானம் குறித்த தடயங்களை சேகரிக்க 2013ல் இயக்கத்திற்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ருக்மினி என்ற ஜிசாட்-7 செயற்கைக்கோள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுடன் இந்திய கடற்படையும் ஒருங்கிணைந்து கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில், கடற்சட்ட விதிகளின்படி இந்திய கப்பல்கள் அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுகிறது.