நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது... மல்லுக்கு நிற்கும் எதிர்கட்சிகள்
டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இதில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இன்று தொடங்கி உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதா, நில கையகப்படுத்தும் மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதை முன்னிட்டு டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 42 தலைவர்கள் கலந்து கொண்டனர். திரிணாமுல், அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
பதவி விலக வேண்டும்
மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த பிரதமர் மோடி விரும்பினால், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்துரா ராஜே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை நீக்க வேண்டும். வியாபம் ஊழலில் மர்ம மரணங்கள் ஏற்பட்டது எப்படி? இதன் பின்னணியில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, தீவிரவாதிகள் அல்லது நக்சலைட்கள் உள்ளனரா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.
விளக்கம் தேவை
லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க வேண்டும். மாநில விஷயங்கள் குறித்து மக்களின் உணர்வுகளை அவையில் தெரியப்படுத்துவது எம்.பி.க்களின் பொறுப்பு. வியாபம் மற்றும் லலித் மோடி விவகாரம் மிகவும் முக்கிய பிரச்னை. அவைகள் மாநிலம் சம்பந்தப்பட்டது அல்ல'' என்றார். மேலும், தங்கள் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு ஆதரவு தருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நில கையக மசோதாவுக்கு இக்கூட்டத் தொடரில் இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முடக்குவது சரியல்ல
நாடாளுமன்றத்தை முடக்குவது சரியல்ல. நாடாளுமன்றம் செயல்பட வேண்டும். விவாதம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றார். அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
23 நாட்களில் என்ன நடக்கும்
மொத்தம் 23 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சமாளிக்க வியூகம்
எதிர்க்கட்சிகளின் திட்டத்தை சமாளிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி உள்பட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், இந்த மழைகால கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கும் வெளிநடப்பு, கூச்சல், குழப்பம், ஒத்திவைப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
மசோதாக்கள் நிறைவேறுமா?
எதிர்க்கட்சிகளின் அமளி, ஒத்திவைப்புகளுக்கு இடையே நிலுவையில் உள்ள எத்தனை மசோதாக்கள் நிறைவேறுகின்றன என்பது கூட்டத் தொடரின் இறுதி நாளில் தான் தெரியவரும்.