இந்திய துணை ராணுவத்தில் இனி அதிக பெண் காவலர்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு
டெல்லி: இந்தியத் துணை ராணுவத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், சகஸ்திர சீமா பால் ஆகியவற்றில் மொத்தம் 9 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இதனால் மேலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அவசியம்:
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குழுவின் 6 ஆவது பரிந்துரை அறிக்கை, துணை ராணுவ படைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவது உடனடி அவசியம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது.
முதல்கட்ட பணி:
இந்த சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இதில், "முதல் கட்டமாக படைக் காவலர் தகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
33 சதவீதம் இட ஒதுக்கீடு:
மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகியவற்றில் 33 சதவீத இடஒதுக்கீடும், எல்லை பாதுகாப்பு படை, சகஸ்திர சீமா பால், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் ஆகிய எல்லை படை பணிகளுக்கு 15 சதவீத பெண்களும் காவலர்களாக நிரப்பப்படுவார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேம்படுத்தும் நடவடிக்கை:
மத்திய ஆயுத போலீஸ் படைகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.