மேற்கு வங்கத்தில் திருப்பம்.. அமித்ஷாவின் வியூகங்களை முறியடிக்க பிரசாந்த் கிஷோருடன் இணைந்த மம்தா
கொல்கத்தா: தேர்தல் வியூகம் அமைப்பதில் கில்லாடி என அரசியல் கட்சிகளால் போற்றப்படும் பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வரும் தேர்தலில் இணைந்து பணியாற்ற உள்ளார். முன்னதாக இவர் அமைத்த தேர்தல் வியூகம் தான் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்.
யார் இந்த பிரசாந்த் கிஷோர். பொதுமக்களுக்கு இந்த பெயர் அவ்வளவாக தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் தான் பிரசாந்த் கிஷோர். கடந்த 2012ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக மீண்டும் வருவதற்கு இவர் அமைத்த தேர்தல் வியூகங்கள் தான் காரணம் என்று தகவல் வந்தது. அப்போது தான் வெளி உலகம் இவரை உற்று கவனித்து.
அதன்பிறகு 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் நன்மதிப்பை வெளிஉலகில் கட்டமைப்பதில் பிரசாத் கிஷோரின் பங்கு அளப்பரியது என்று சொல்கிறார்கள். இவருடைய ஆலோசனையின் படியே பல பிரச்சாரங்களை, வியூகங்களை அமைத்தாராம் பிரதமர் மோடி. இதன் மூலம் மோடி அலை உருவாகி, 2014 தேர்தலில் பிரதமர் மோடி மிகப்பெரிய வெற்றியும் பெற்றார்.
நிதீஷ் லாலு வெற்றி
இதைத்தொடர்ந்து பிரசாத் கிஷோரை பற்றி கேள்வி பட்ட பீகாரின் இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்களான நிதீஷ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் அழைத்து பேசினர். ஆளும் பாஜகவுக்கு வேலை செய்த கிஷோர் டீம். எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மகா கூட்டணிக்கு 2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் வேலை பார்த்தார். இதன் காரணமாக பீகாரில் லாலு-நிதீஷ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
காங்கிரஸ் வெற்றி
அதன்பின்னர் 2016ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்வராக உள்ள கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்காக பிரசாத் கிஷோர் வேலை செய்தார். இதனால் அங்கு காங்கிரஸ் கட்சி பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
ஜெகன்மோகன் வெற்றி
அடுத்ததாக இந்த ஆண்டு (2019ம் ஆண்டு) ஆந்திராவில் புதிதாக முதல்வராகி உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பின் பேரில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாத் கிஷோர் தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்தார். அவர் அமைத்து கொடுத்த வியூகத்தில் ஆந்திர மக்களை வெகுவாக கவர்ந்தது என்றால் யாத்திரை வியூகம். இதன் காரணமாக ஆந்திர சட்ட மன்ற தேர்தலில் ஜெகன் மோகனின் கட்சி பெரிய அளவில் வென்று ஆட்சியை பிடித்தது. மேலும் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 22 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியது.
மம்தாவுடன் இணைந்தார்
இதனால் இவரது புகழ் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியால் அதிர்ச்சி அடைந்துள்ள மம்தா பானர்ஜி, வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம் அமைத்து தரும்படி பிரசாந்த் கிஷோரை அணுகினார்.அவரும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதன்படி இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளாராம்.
மம்தா வெல்வாரா
இதன் மூலம் பிரசாத் கிஷோர் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் அமைக்கப்போகிறார். அதேநேரம் அமித்ஷாவும் பாஜகவுக்காக வியூகம் அமைத்து வருகிறார். இவருவரில் யார் வியூகம் மேற்கு வங்கத்தில் வெல்லும் என்பதை அறிய 2021 மே வரை காத்திருக்க வேண்டும். சரி அதவிடுங்க நம்மூர்ல எல்லாம் இந்த மாதிரி யாருமே டிரை பண்ணி பார்க்குறது இல்லையே ஏன்?