குடியரசுத்தலைவர் 23ம் தேதி ராமேஸ்வரம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசுத்தலைவர் 23ம் தேதி ராமேஸ்வரம் வர உள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லி : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 23ம் தேதி ராமேஸ்வரம் கோவிலுக்கு வர உள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக கடந்த ஜூலை மாதம் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். ராமேஸ்வரம் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக அவர் வரும் 23ம் தேதி தமிழகத்திற்கு முதல் சுற்றுப்பயணம் வர உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
டெல்லியில் இருந்து 23ம் தேதி காலை தனிவிமானத்தில் கிளம்பும் அவர், பகல் 10.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன் பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11 மணியளவில் மண்டபம் செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமிகள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார்.
கோவிலில் தரிசனத்தை முடித்த பின், அங்கிருந்து புறப்பட்டு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மணி மண்டபம் சென்று அங்கு உள்ள கலாம் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். இதன் பின்பு மீண்டும் மதுரை வந்து அங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கிளம்பி செல்வார் என்று அவரது பயணக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் குடியரசுத்தலைவர் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் ராமேஸ்வரம் கோவில், மண்டபம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொடர்ந்து மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து ராமேஸ்வரம் வர இருக்கும் குடியரசுத்தலைவரை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் மனு கொடுக்க உள்ளதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தனர். ஆனால், இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.