மணிலாவில் கிழக்கு ஆசிய மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு
மணிலாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய மாநாட்டில் இன்று கலந்துகொள்ள இருக்கிறார் பிரதமர் மோடி.
மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் கிழக்கு ஆசிய மற்றும் இந்திய-ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க இருக்கும் கிழக்கு ஆசிய மாநாடு மற்றும் இந்திய- ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டின் அதிபர் ரோட்ரிரோ டுடெர்டே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று இன்று நடக்க இருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார் நரேந்திர மோடி.
இந்திய-ஆசியான் மாநாட்டில், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளோடு இருக்கும் வர்த்தக உறவுகள் மேம்படுத்துவது குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. 15வது இந்திய-ஆசிய மாநாட்டில் 2017ம் ஆண்டிற்கான வர்த்தக முன்னெடுப்புகள் குறித்து அந்நாட்டின் தலைவர்கள் உரையாற்றுவார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அதுபோல கிழக்கு ஆசிய மாநாடும் நடக்க இருக்கிறது. இதில் ஆசியான் அமைப்பு நாடுகளோடு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளும் இதில் உறுப்பினராக உள்ளன. இன்று நடக்க இருக்கும் 12வது மாநாட்டில் ஆஸ்திரேலியா, புருனே, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, மியான்மர், நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
இந்த மாநாட்டில் பிராந்திய மற்றும் சர்வதேச நலன்கள் மற்றும் பிரச்னைகள் குறித்தும், கடலோர பாதுகாப்பு, தீவிரவாதம், முறைகேடான நகர்வு குறித்த பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.