கூகுளுடன் கைகோர்க்கும் இந்திய ரயில்வே துறை... இது வேற லெவல் திட்டம்
இந்தியாவில் 'விர்சுவல் டூர்' என்ற புதிய விஷயத்தை அறிமுகப்படுத்துவதற்காக இந்திய ரயில்வே கூகுள் நிறுவனத்துடன் கை கோர்க்க இருக்கிறது.
டெல்லி: இந்தியாவில் 'விர்சுவல் டூர்' என்ற புதிய விஷயத்தை அறிமுகப்படுத்துவதற்காக இந்திய ரயில்வே கூகுள் நிறுவனத்துடன் கை கோர்க்க இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் சுற்றுலா துறை நன்றாக வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.
இதற்காக இந்தியா முழுக்க கூகுள் நிறுவனம் நிறைய வீடியோக்களை எடுக்க திட்டமிட்டு உள்ளது. இந்த செயல்திட்டம் மிகவும் பெரிய அளவில் செய்யப்பட இருக்கிறது.
உலகிலேயே 'விர்சுவல் டூர்' தொழில் நுட்பத்திற்காக இந்திய ரயில்வே துறை மட்டுமே கூகுளுடன் கை கோர்த்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விர்சுவல் டூர் என்றால் என்ன
உலகின் சில முக்கிய சுற்றுலாதளங்களில் 'விர்சுவல் டூர்' என்ற வசதி செயல்பாட்டில் உள்ளது. இதை தமிழில் மெய்நிகர் பயணம் என்று கூறலாம். உலகின் மிகவும் பிரபலமாக இருக்கும் இடங்களுக்கு நேரில் செல்லாமலே மிகவும் தெளிவான வீடியோ மூலம் நேரில் இருப்பதை போலவே பார்க்க முடியும். இதற்காக கூகுள் '''விர்சுவல் கார்ட் போர்ட்'' என்ற கண்ணாடி போன்ற கருவியை வெளியிட்டு இருக்கிறது. இதில் அனைத்தையும் மிகவும் தெளிவாக பார்க்க முடியும்.
கூகுளுடன் ரயில்வே துறை
தற்போது இந்த வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்து இருக்கிறது. அதன்படி இந்தியா முழுக்க இருக்கும் பெரிய ரயில் நிலையங்களில் ரயில்வே துறை முதற்கட்டமாக இந்த வசதியை ஏற்படுத்தும். உதாரணமாக மும்பையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டால் அருகில் இருக்கும் முக்கியமான இடங்கள் குறித்து வீடியோக்கள் அந்த 'விர்சுவல் டூர்' வீடியோவில் இடம்பெறும். இந்த செயலில் ரயில்வேக்கு கூகுள் நிறுவனம் உதவி செய்யும்.
எப்படி செய்வார்கள்
இந்த வீடியோவில் முழுக்கு முழுக்க புகழ்பெற்ற இடங்கள் குறித்த தகவல்கள் இருக்கும். ஏற்கனவே ரயில்வேக்கு சொந்தமான மியூசியத்தில் இருந்து தேவையான தகவல்களை கூகுள் வாங்கி இந்த வீடியோவை உருவாக்கும். மேலும் தகவல்கள் தேவைப்படும் சமயத்தில் நேரடியாக புகழ்பெற்ற இடங்களுக்கு சென்று அழகான வீடியோக்களை பதிவு செய்து அந்த 'விர்சுவல் டூர்' வசதியில் வெளியிடும். இதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும்.
சோதனை முயற்சி
தற்போது இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 6 இடங்களில் இந்த 'விர்சுவல் டூர்' வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதை பயணிகள் மிகவும் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். விரைவில் இது மற்ற ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும். ஊட்டி போன்ற புராதான சிறப்பு மிக்க ரயில் நிலையங்களில் முதலில் இந்த வசதி பயனுக்கு வரும் என்று கூறப்படுகிறது.