அடுத்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் உயரும் பயணிகள் ரயில் கட்டணம்
டெல்லி: பயணிகள் ரயில் கட்டணம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அடுத்த ஆண்டு துவக்கத்தில் மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அந்த பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அண்மை காலத்தில் எரிபொருளின் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது. அதனால் டிசம்பரில் உயர்த்தப்பட வேண்டிய ரயில் கட்டணம் குறித்த அறிவிப்பு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றார்.
ரயில்வேயின் கொள்கைப்படி பயணிகள் கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும். முன்னதாக கடந்த ஜூன் மாதம் பயணிகள் ரயில் கட்டணம் 4.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 1.4 சதவீதமும் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,
அரசின் பாரத்தை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் முன்பு ரயில் சேவையின் தரம் உயர்த்தப்படும். ரயில்வே துறையில் பெரிய முதலீடுகள் தேவைப்படுகிறது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை முடிக்க ரூ.6 லட்சம் முதல் 8 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது என்றார்.