பத்ம பூஷன் விருது பெற்ற புகழ் பெற்ற விஞ்ஞானி யஷ் பால் காலமானார்!
டெல்லி: புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி யஷ் பால் காலமானார்; அவருக்கு வயது 90.
1926ம் ஆண்டு ஜங் மாவட்டத்தில் பிறந்தவர் யஷ் பால். தற்போது இது பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் உள்ளது. 1949ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த இவர், 1958ம் ஆண்டு, கூடுதல் சக்தி இயற்பியல் தொலைதொடர்பு உள்ளிட்ட பிரிவுகளில் பிஹெச்டி படிப்பை நிறைவு செய்தார்.
இவர் அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் இயக்குனராகவும், இந்திய திட்டக்குழுவில் முதன்மை ஆலோசகராகவும் பதவியில் இருந்துள்ளார். அதன் பின்னர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார்.
விண்வெளி கதிர்கள் குறித்த ஆய்வுக்காக புகழப்பட்டவர். தூர்தர்ஷனில் டர்னிங் பாயின்ட் என்ற அறிவியல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமானவர்.
மத்திய அரசிடமிருந்து பத்ம பூஷன் விருது பெற்ற யஷ் பால், கடந்த 5 வருடங்களாக நுரையீரல் புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.