டெல்லியில் காங்கோ இளைஞர் படுகொலை எதிரொலி... காங்கோவில் இந்தியர்கள் மீது தாக்குதல்.. 2 பேர் காயம்
டெல்லி: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இந்தியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. டெல்லியில் காங்கோ நாட்டு இளைஞர் மசோன்டா கெடாடா ஆலிவர் என்ற இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் காங்கோ நாட்டில் பெரும் கோப அலையை உருவாக்கியுள்ளது. இது தற்போது இந்தியர்கள் மீது திரும்பியுள்ளது. இந்தியர்கள் மீது நடந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நைஜீரியாவைச் சேர்ந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தெலுங்கானா மாநில அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
காங்கோவில் ஏற்பட்டுள்ள கலவரம் தொடர்பாக அங்குள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காங்கோ நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும், அவர்களின் உடமைகள், சொத்துக்களுக்கும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என காங்கோ நாட்டு போலீஸ் தலைவர் ஜீன் டி டியூ ஓலேகே உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் பகுதியில் காங்கோவைச் சேர்ந்த மெசோன்டா கெடாடா ஆலிவர் என்ற இளைஞர் ஆட்டோவில் பயணித்துள்ளார். சேருமிடம் வந்ததும் அவரிடம் ஆட்டோ டிரைவர் கூடுதல் கட்டணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மேலும் ஒருவருடன் சேர்ந்து அந்த இளைஞரை, ஆட்டோ டிரைவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஆலிவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸார் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இன்னொருவர் தப்பி விட்டார்.
இந்த சம்பவம் காங்கோ நாட்டில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கின்ஹாசாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கோ நாட்டவர் கூடி இந்தியர்களுக்கு எதிராக கலவரத்தில் இ்றங்கினர். இந்தியர்களின் கடைகள் பல அடித்து நொறுக்கப்பட்டன. இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. காங்கோவை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். போலீஸார் கலவரத்தைத் தடுக்க துப்பாக்கி சூடும் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
தூதரகம் அறிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக கின்ஹாசாவில் உள்ள இந்தியத் தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கோ நாட்டு போலீஸ் தலைவர் உறுதி அளித்துள்ளார். எனவே இந்தியர்கள் அச்சமடையத் தேவையில்லை.
இருப்பினும் நிலைமை சரியில்லாமல் இருப்பதால் காங்கோவில் வசிக்கும் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. அதிகம் வெளியில் உலவ வேண்டாம். இருக்கும் இடங்களிலேயே இருவரும் பத்திரமாக தங்கிக் கொள்ள வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் போது யாருடனும் விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லி காங்கோ இளைஞர் படுகொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இன்னொரு நபரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
நிலைமை அமைதி
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில் காங்கோவில் இந்தியர்களுக்குச் சொந்தமான சில கடைகள் தாக்கி சூறையாடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நமது தூதரகத்துடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ - இந்தியா இடையிலான உறவு நீண்ட நெடியது. இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்கள் மூலம் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான காங்கோ மாணவர்கள் பலன் பெறுகிறார்கள் என்றார் அவர்.
காங்கோ நாட்டில் 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜீரிய வாலிபருக்கு தாக்கு
இந்த நிலையில் டெல்லியில் நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை தருமாறு மாநில அரசககு மத்திய அரசு விரிவான அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிறப்பித்துள்ளதாக விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இரவுஹைதராபாத்தில் உள்ள ஒரு இடத்தில் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் 23 வயதான நைஜீரிய மாணவர் உள்ளூரைச் சேர்ந்த டிரைவர் ஒருவரால் தாக்கப்பட்டார்.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் இந்தியாவில் படித்து வரும் ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்களின் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இது காங்கோவில் வன்முறையாக மாறியுள்ளது.
இதற்கிடையே இந்தியா நடத்தவுள்ள ஆப்பிரிக்க தினத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளும் சக ஆப்பிரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன என்பது மத்திய அரசையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.