இந்திய ராணுவ வீரர்களுக்கு அரசின் தீபாவளி பரிசு.. 10 சதவீத அரியர் தொகை மொத்தமாக கிடைக்கப்போகிறது
டெல்லி: ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு தீபாவளி பரிசு வழங்க தயாராகிவருகிறது. அவர்களுக்கான அரியர் ஊதிய தொகையில் சுமார் 10 சதவீதத்தை தீபாவளிக்கு முன்பாக வழங்க உள்ளதாம் மத்திய அரசு.
இந்த தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே, வீரர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவில் சர்வீஸ் அரசு ஊழியர்களை போல, ராணுவத்தினருக்கு இன்னமும், அரியர் தொகை கிடைக்கவில்லை, அதேபோல புதிய சம்பள விகிதமும் அமல்படுத்தப்படவில்லை. ஊதிய கமிஷன் பரிந்துரைகளை ராணுவத்தினருக்கு அமல்படுத்துவதற்கு முன்பு 4 முக்கிய பரிந்துரைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற முப்படை தளபதிகளின் ஒருமித்த கோரிக்கை காரணமாக ஊதிய உயர்வு பரிந்துரையை இன்னமும் அமல்படுத்த முடியவில்லை
எனவே, அரியர் தொகையில் 10 சதவீதத்தை தீபாவளிக்கு முன்பாக, வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சுமார் ஒரு மாத சம்பளத்திற்கு ஈடானது. எனவே, ராணுவ வீரர்கள் இதை ஒரு தீபாவளி போனஸ் தொகையாக கணக்கில் கொள்ள முடியும்.