இலங்கையில் மட்டுமா? இந்தியா மீதும்தான் மனித உரிமை மீறல் புகார் இருக்குதே.. இது சு.சுவாமி
டெல்லி: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவிலும்தான் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என்று பகிரங்மாக விமர்சனம் செய்துள்ளார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி.
மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே அழைக்கப்பட்டதை நியாயப்படுத்தி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டி:
ராஜபக்சேவை அழைப்பது என்பது ஒரு இறையாண்மையுள்ள நாடு மற்றொரு இறையாண்மையுள்ள அண்டை நாட்டுக்கு விடுக்கும் ஒரு அழைப்பின் அடிப்படையிலானது. அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையில் சர்வதேச உறவுகள் என்பது மத்திய அரசுக்குள்ள அதிகாரம் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு விவகாரங்களில் மாநில அரசுகள் தலையிடக் கூடாது. நாம் ஜனநாயக நெறிகளை கடைபிடிக்கிறோம். அதனால் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டுக் கொள்கிறோம். இது ஒருமித்த கருத்து ஏற்படுத்துதலுக்கான முயற்சி அவ்வளவுதான்.. அதற்கான மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பது பொருள் அல்ல.
அமெரிக்காவும்தான் குண்டு போட்டது
இலங்கை அரசுக்கு எதிராக பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப் போரில் கூட பல லட்சம் பொதுமக்கள் பலியாகினர்.
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியபோது அப்பாவி பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவத்தினர்கூட அதில் பலியாகவில்லை.
புலிகளும் தான் கொன்றார்கள்...
ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூடத்தான் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள். அது ஒரு யுத்தம் அவ்வளவுதானே...
விடுதலைப் புலிகள் மீதும் கூட கொலை வழக்குகளிலும் மனித உரிமை மீறல்களிலும் குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழர் நலனுக்கு தமிழகமோ தமிழக அரசோ எந்த வகையில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்?
தமிழகம் தலையிடக் கூடாது
யாழ்ப்பாணத்தில் உள்ள முதல்வரே சொல்கிறார்.. இந்திய தமிழர்கள், அரசியல்வாதிகள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம்.. அதனால் எங்களுக்கும் சிங்களவருக்குமான விரோதமே அதிகரித்திருக்கிறது என்கிறார்.
இலங்கைத் தமிழர் விஷயத்தில் இந்தியா ஏதாவது செய்ய வேண்டும் எனில் அந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தித்தான் ஆக வேண்டும்.
இந்தியாவில் கூட மனித உரிமை மீறல்கள்..
ஏன் நாம் கூடத்தான் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி இருக்கிறோம்.. காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூரிலும் மனித உரிமை மீறல் புகார்கள் இருக்கின்றன.. எப்படி நாம் இலங்கையை தனிமைப்படுத்துவது? இவை எல்லாவற்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் பாகிஸ்தானையும் சீனாவையும் தளம் அமைக்க அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இது இந்தியாவுக்கு நல்லது அல்ல. நாம் கண்டுகொள்ளாமல்விட்டதால் எதிரிகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
தற்போதைய லோக்சபா தேர்தலை எடுத்துக் கொள்ளுங்கள். விடுதலைப் புலிகளுக்கு மிக நெருக்கமான வைகோவை தமிழக மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். வெளியுறவுக் கொள்கை என்பது மத்திய அரசினுடையதுதான். அது மாநில அரசு உரிமை அல்ல
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.