திருமணம், வீட்டுவேலை, குழந்தை வளர்ப்பு... இந்தியாவில் குறைந்து வரும் பெண் தொழிலாளர் எண்ணிக்கை!
டெல்லி: உலகம் முழுவதும் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் அந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த 2005ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பணியாற்றும் பெண்களின் எணணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு இது குறைந்துள்ளது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இக்காலகட்டத்தில் பணியாற்றும் மகளிர் எண்ணிக்கை குறைந்ததில்லை என்று சர்வதேச தொழிலாளர் கழகம் (ஐஎல்ஓ) கூறியுள்ளது.
கவலை...
பணியாற்றும் இடங்களில் பாலினச் சமநிலையை உறுதிப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், இந்தியப் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிந்து வருவதாகவும் ஐஎல்ஓ கவலை தெரிவித்துள்ளது.
சரிவு...
கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவில் பெண் தொவழிலாளர்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக இருந்தது. இது 2014ல் 27 சதவீதமாக குறைந்தது. அதாவது பத்து சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்தான் அதிக அளவில் பெண் தொழிலாளரக்ள் எணணிக்கை கணிசமாக சரிந்துள்ளது.
முக்கியக் காரணம்...
அதிக அளவில் பெண்கள் படிக்க ஆரம்பித்திருப்பது மற்றும் விவசாயக் கூலி வேலைகளிலிருந்து பெண்கள் விடுபட்டு வருவது ஆகியவையே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாக ஐஎல்ஓ குறிப்படுகிறது.
பாலியல் தொல்லை...
அதேசமயம், பணியாற்றும் இடத்தில் சந்திக்கும் பாலியல் தொல்லைப் பிரச்சினையும் ஒரு முக்கியக் காரணம் என்று மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அனுராதா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
114 நாடுகளில்...
இது ஒருபுறம் இருக்க கடந்த பத்து ஆண்டுகளில் பிற உலக நாடுகளில் பெண்கள் தங்களது வேலைவாய்ப்பில் உயர்வைக் கண்டு வருகின்றனர். அவர்களின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. 185 பதிவு செய்த நாடுகளில் 114 நாடுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை நல்ல உயர்வைக் கண்டுள்ளது. 41 நாடுகளில் சரிந்துள்ளது.
திருமணம்...
பல இடங்களில் திருமணத்திற்குப் பிறகு வேலையை விடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவும் பெண் தொழிலாளர் எண்ணிக்கை சரிவுக்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் இரவுப் பணி அல்லது காலையில் சீக்கிரமே வேலைக்கு வரும் நிலை போன்றவை காரணமாக பெண்கள் வேலையை விடும் நிலையும் அதிகரித்து வருகிறது.
குழந்தை வளர்ப்பு...
வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது, குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைலாலும் கூட பெண்கள் வேலையை விடும் நிலை உருவாகிறதாம்.
சோம்பேறி ஆண்கள்...
வீட்டு வேலை செய்வதில் உலக நாடுகளிலலேயே இந்திய ஆண்கள்தான் ரொம்பச் சோம்பேறியாக உள்ளனர். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கூட இந்திய ஆண்கள் சமையல் வேலையில் பெண்களுக்கு உதவுவதில்லையாம். இதுவே ஸ்லோவேகியாவில் சராசரியாக 100 நிமிடங்கள் வரை ஆண்கள் வீட்டு வேலைகளில் உதவி செய்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.