உலக சாதனை... பேஸ்புக் தோழிகள் 2500 பேர் சேர்ந்து உருவாக்கிய ‘படா’ சைஸ் போர்வை!
டெல்லி: பேஸ்புக் மூலம் தோழிகளான பெண்கள் 2500 பேர் சேர்ந்து மிகப்பெரிய போர்வையை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
சமூகவலைதளப் பக்கமான பேஸ்புக் போன்றவை கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இடமாக மட்டுமின்றி, சமயங்களில் நல்ல விஷயங்களுக்காகவும் பயன்படுகிறது. சென்னை வெள்ளத்தின் போது இது போன்ற சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து உதவிகள் கிடைத்தன.
இந்நிலையில் பேஸ்புக்கில் தோழிகளான பெண்கள் குழு சேர்ந்து உலகின் மிகப்பெரிய போர்வையை உருவாக்கியுள்ளனர்.
இந்தியப் பெண்கள்...
இந்த சாதனையை புரிந்த 2500 பெண்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். சுமார் 6 மாத கால உழைப்பில் இந்தப் போர்வை உருவாக்கப்பட்டுள்ளது.
கொக்கிப்பின்னல்...
கொக்கிப்பின்னல் முறையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய போர்வைகளைக் கொண்டு இந்த உலக சாதனை போர்வை தயாரிக்கப்பட்டுள்ளது. இது 1,20,000 சதுர அடி பரப்பில் உள்ளது.
ரொம்பப் பெரியது...
இந்த அளவானது கிட்டத்தட்ட அமெரிக்காவின் 2 கால்பந்து மைதானங்களுக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர்வை, ஏழை மக்களுக்கு பிரித்து அளி்க்கப்பட உள்ளது.
புதிய சாதனை...
இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் சுமார் 1000 பேர் இணைந்து உருவாக்கிய போர்வையே உலக சாதனையாகக் கருதப்பட்டு வந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்தியப் பெண்கள் முறியடித்துள்ளனர்.