டான் பிராட்மேனுக்கு டஃப் கொடுக்கும் இளம் வீரர்..இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம்.. சர்ஃபராஸ் கான்!
ராஜ்கோட்: செளராஷ்டிரா அணிக்கு எதிரான இராணி கோப்பை கிரிக்கெட்டில் கடினமான சூழலில் களமிறங்கி சதம் விளாசிய சர்ஃபராஸ் கான், விரைவில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கும் ஒரு கிரிக்கெட்டர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன். அதற்கு காரணம், அன்று கிரிக்கெட்டில் கோலோச்சிய இங்கிலாந்து அணிக்கு எதிரான அவரது ஆட்டமும், அவரது ஆவரேஜும் தான்.
52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டான் பிராட்மேன் 29 சதம், 13 அரைசதம் என்று விளாசியதன் விளைவாக 99.94 ஆவரேஜாக வைத்துசென்றார். இன்னும் சில காலம் போனால், இது உண்மையா என்ற எதிர்கால வீரர்கள் வியந்து போவர்.
சர்ஃபராஸ் கான்
ஏன் திடீரென டான் பிராட்மேன் பற்றி பேசுகிறோம் என்றால், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் சாதனையை எட்டிப்பிடிக்க ஒரு இளம் வீரர் வேகமாக முன்னேறி வருகிறார். இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இராணி கோப்பை என்று அசத்தி வருகிறார். அவர் தான் சர்ஃபராஸ் கான்.
பிரமிக்க வைக்கும் சராசரி
இதுவரை உள்ளூர் கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃபராஸ் கான், 10 சதம், 8 அரைசதம் என்று சுமார் 2,800 ரன்களை விளாசியுள்ளார். இன்னும் தகவல் தான் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. இந்த ரன்களை அவர் 82.60 ஆவரேஜில் விளாசியுள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு 82 ரன்களை விளாசுவது எளிதான காரியம் அல்ல. ஏன் உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான்களான வாசிம் ஜாஃபர், விஹாரிக்கு கூட இவ்வளவு சராசரி இருந்ததில்லை.
இராணி கோப்பையில் சதம்
அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டு ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இராணி கோப்பை என்று எந்த இறுதிப் போட்டியை எடுத்துக்கொண்டாலும், சத்தமில்லாமல் சதம் விளாசி செல்வது முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இராணி கோப்பையில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், கடினமான சூழ்நிலையில் களமிறங்கி சதம் விளாசியுள்ளார்.
ஜாம்பவான்கள் பாராட்டு
அவர் சதம் விளாசிய அடுத்த நிமிடம் இந்திய கிரிக்கெட் வீரர்களான சூர்யகுமார் யாதவ் முதல் முன்னாள் வீரர்களான ராபின் உத்தப்பா, இர்ஃபான் பதான் வரை வாழ்த்துக்களை கூறியதோடு, விரைவில் இந்திய அணிக்காக விளையாட பாராட்டு தெரிவித்துள்ளார். இதனால் யார் இந்த சர்ஃபராஸ் கான் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யார் இந்த சர்ஃபராஸ் கான்?
தற்போது பீஸ்ட் மோடில் சதங்களாக விளாசி வரும் சர்ஃபராஸ் கான் வேறு யாரும் அல்ல. ஆர்பிசி அணியால், தக்கவைக்கப்பட்ட வீரர். ஆனால் ஃபிட்னெஸ் பிரச்சினை காரணமாக ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், உள்ளூர் கிரிக்கெட்டில் இவரை மீறி எதுவும் நடக்க முடியாத நிலைக்கு முன்னேறியுள்ளார்.
விரைவில் இந்திய வீரர்
இவரது ஆட்டத்தை பாராட்டும் ரசிகர்கள் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாட சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் சர்ஃபராஸ் கானுக்கு இனி ரசிகர்களின் சிபாரிசு எல்லாம் தேவை இல்லை. ஏனென்றால் அவர் இந்திய அணியின் கதவுகளை உடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.