சவுதியில் முதலாளியால் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட 3 இந்தியர்கள் நாடு திரும்பினர்
திருவனந்தபுரம்: சவுதிக்கு வேலை சென்ற இடத்தில் முதலாளியால் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 3 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் பைஜு, அபிலாஷ்(21) மற்றும் விமல் குமார். சவுதியில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி ஒரு ஏஜென்சி அவர்களிடம் பணம் பெற்றுள்ளது.
அவர்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சவுதிக்கு அந்த ஏஜென்சி அனுப்பி வைத்துள்ளது. அவர்களை அவர்களின் முதலாளி அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மூன்றில் ஒருவர் தாங்கள் அடி வாங்குகையில் அதை செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டார்.
அந்த வீடியோ தீயாக பரவி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. வீடியோவை பார்த்து தான் கேரள அரசும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் அந்த 3 வாலிபர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கடந்த 26ம் தேதி நாடு திரும்பினர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் வரவேற்றனர்.
ஊர் திரும்பிய அபிலாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வீடு கட்ட கடன் வாங்கியிருந்தேன். வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்தால் கடனை அடைத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை என்றார்.