சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் பணம் 45 சதவீதம் குறைந்துவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: சுவிஸ் வங்கியில் இந்தியரின் கறுப்பு பண டெபாசிட் 45 சதவீதம் குறைந்து விட்டது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிறுவன தினவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் தூண்கள் சார்ட்ர்டு அக்கவுண்டண்டுகள். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் கையெழுத்து என்பது பிரதமரின் கையெழுத்தை விட வலிமையானது.
அரசின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது. இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி புதிய பாதை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிலர் கொள்ளையடித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தவறான செயல்களில் ஈடுபட்டன. அதனால் அதன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
முறைகேடாக ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் ஊழலை ஒழித்துக்கட்ட மிகப்பெரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு மேற்கொண்ட முதல் முயற்சி தான் பணமதிப்பு இழப்பு. இதனால் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்பு பணம் 45 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. இவ்வாறு மோடி பேசினார்.