ரவீந்திரநாத் தாகூர், அன்னை தெரசா, சர்.சி.வி.ராமன்.... இதுவரை நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்!
டெல்லி: இந்தாண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு இயக்கமான பச்பன் பச்சாவ் அந்தோலனை உண்டாக்கிய கைலாஷ் சத்யார்த்தியும், பெண் குழந்தைகள் கல்விக்காகப் போராடி தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளான பாகிஸ்தான் சிறுமி மலாலாவும் தேர்வு செய்யப் பட்டுள்ளார்கள்.
ஆண்டு தோறும் இலக்கியம், உலக அமைதி, மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களில் பெரும் பங்காற்றியவர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப் பட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை 13 இந்தியர்கள் இந்த பரிசைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர் ஆவர்.
இதோ, இதுவரை நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் குறித்து ஒரு பார்வை...
ரொனால்டு ராஸ்...
கடந்த 1902ம் ஆண்டு மருந்தியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் ரொனால்டு ராஸ். இவர் இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர் ஆவார். மலேரியாவை உண்டாக்கும் பிளோஸ்மோடியத் தொற்றுயிரியை அனாஃபிலஸ் கொசுவில் கண்டறிந்தமைக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
ருட்யார்ட் கிப்ளிங்...
அதனைத் தொடர்ந்து 1907ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் ஜோசப் ருட்யார்ட் கிப்ளிங். இவரும் இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர் தான். மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர். குறுங்கதைக் கலையில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாளராக இவர் கருதப்படுகிறார்
ரவீந்திரநாத் தாகூர்...
இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை இயற்றிய வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், கடந்த 1913ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் இப்பரிசைப் பெற்றார். இவர்தான் நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்திய மண்ணின் மைந்தன் ஆவார்.
சர்.சி.வி.ராமன்...
சுருக்கமாக சர்.சி.வி.ராமன் என்றழைக்கப் படும் சர் சந்திரசேகர வெங்கட ராமன் கடந்த 1930ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்ததற்காக இவருக்கு இப்பரிசு வழங்கப் பட்டது. இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு என்று பெயர்.
ஹர் கோவிந்த் குரானா...
ஹர் கோவிந்த் குரானா ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக்குறியீடு பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் அவர் ஆற்றிய ஆராய்விற்காக 1968ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினை மார்சல் நோரென்பர்க், இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
அன்னை தெரசா...
அன்பு மற்றும் தியாகத்தின் மறுபெயராக இன்றளவும் போற்றப்படும் அன்னை தெரசாவிற்கு கடந்த 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவரது சேவைகள் சொல்லிலடங்காதவை.
சுப்பிரமணியன் சந்திரசேகர்...
வானியல்-இயற்பியலாளரான சுப்பிரமணியன் சந்திரசேகர், விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக வில்லியம் ஃபௌலருடன் இணைந்து கடந்த 1983ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
அமர்த்தியா சென்...
இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞரான அமர்த்தியா குமார் சென், கடந்த 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இவருக்கு 1999ம் ஆண்டு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்...
வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளரும் ஆவார். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக இவருக்கும், தாமஸ் ஸ்டைட்ஸ் மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.