ஏமனில் சிக்கித் தவிக்கும் 3500 இந்தியர்களை மீட்க கப்பல்களை அனுப்புகிறது மத்திய அரசு
டெல்லி: ஏமனில் உள்நாட்டுப் போர் உச்சமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு கப்பல்களை அனுப்ப உள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசை எதிர்த்து சண்டையிட்டு வருவதால் ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் 8 நாடுகள் ஒன்று சேர்ந்து, ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து ஏமனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியா நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதும், அங்குள்ள இந்தியர்களை வெளியேறும் படி அறிவுறுத்தியது இந்தியா. இந்நிலையில், அங்கு போர் தீவிரமடைந்து வருவதால் கப்பல்கள் மூலம் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏமனில் 3500க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். தலைநகர் சனாவில் மட்டும் 2500க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் ஆவர்.
எனவே, ஏமனில் உள்ள இந்தியர்கள் அனைவரும், அந்நாட்டை விட்டுப் புறப்படத் தேவையான அனைத்து உதவிகளையும் சனாவில் உள்ள இந்திய தூதரகம் அளிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டிக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
ஏமனில் உள்ள இந்தியர்கள், தங்களுக்குத் தேவையான உதவிகளை 00-967-734 000 658 மற்றும் 00-967-734 000 657 என்ற அவரச தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது.
கப்பல்களில் அழைத்து வர முடியாத இந்தியர்கள் சாலை மார்க்கமாக சவுதி அரேபியா வழியாக இந்தியா அழைத்து வரப்படுவர் என மத்திய அரசு கூறியுள்ளது.