அநாகரீகமாக உடை அணிந்ததாகக் கூறி பெண் பயணியை விமானத்தில் ஏற்ற மறுத்த இன்டிகோ
மும்பை: மும்பையில் இருந்து டெல்லி கிளம்பிய இன்டிகோ விமானத்தில் பெண் ஒருவர் அநாகரீகமாக உடை அணிந்திருந்ததாகக் கூறி அவரை விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை.
இன்டிகோ விமானம் ஒன்று திங்கட்கிழமை காலை மும்பையில் இருந்து டெல்லிக்கு கிளம்பியது. விமான ஊழியர்கள் பெண் பயணி ஒருவர் அநாகரீகமாக உடை அணிந்திருந்ததாகக் கூறி அவரை விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் பேண்ட், சட்டை அணிந்து வந்தார். ஆனால் அதற்குள் அந்த விமானம் கிளம்பிச் சென்றுவிட்டது. இதையடுத்து அவர் வேறு விமானம் மூலம் சென்றார். அந்த பெண் இன்டிகோ நிறுவனத்தில் ஒரு காலத்தில் பணியாற்றியவர். அவரின் சகோதரி தற்போது இன்டிகோ நிறுவனத்தில் தான் வேலை செய்து வருகிறார்.
இது குறித்து சக பயணியான புரபி தாஸ் என்பவர் கூறுகையில்,
அந்த பெண் ஒழுங்காகத் தான் ஆடை அணிந்திருந்தார். முழங்காலுக்கு மேலே வரும் வரையிலான கவுன் அணிந்திருந்தார். ஏதோ சப்தம் கேட்கிறதே என்று பார்த்தபோது அந்த பெண் அழுது கொண்டிருந்தார். அவரை இன்டிகோ ஊழியர்கள் 3 பேர் விமானத்தில் ஏறவிடாமல் தடுத்தனர். அவர் முறையாக ஆடை அணியவில்லை என்றனர் என்றார்.