சென்னை, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் 47 இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி
Recommended Video
டெல்லி: சென்னை, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் இண்டிகோ நிறுவனத்தின் 47 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு விமான சேவை ஒழுங்குமுறை இயக்குநரகம் உத்தரவையடுத்து இந்த விமானங்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறைந்த கட்டண விமான சேவை அளித்து வரும் விமான நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது இண்டிகோ.
இன்ஜினில் கோளாறு
இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து, உத்தரபிரதேசத்தின் லக்னோ நகருக்கு பயணித்தது. ஆனால் புறப்பட்ட 40 நிமிடங்களில் அந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவசரமாக அந்த விமானம் அகமதாபாத் திரும்பியது.
பாதுகாப்பு உத்தரவு
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக, உள்நாட்டு விமான சேவை ஒழுங்குமுறை இயக்குநரகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், குறிப்பிட்ட சில வகை இன்ஜின்களை குறிப்பிட்டு, இவற்றை பயன்படுத்தும் விமானங்கள் இயக்குவதை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டது.
நேற்றும் ரத்து
இதையடுத்து நேற்று மொத்தம் 11 இண்டிகோ மற்றும் கோஏர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் 47 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை, பெங்களூர் விமானங்கள்
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், பாட்னா, ஸ்ரீநகர், புவனேஸ்வர், அமிருதசரஸ் மற்றும் குவகாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.