மனைவியுடன் ஓடும் விமானத்தில் சண்டை.. திடீரென மாயமான கணவர்!
லக்னோ: இன்டிகோ விமானத்தில் கோவாவிலிருந்து லக்னோவுக்கு மனைவியுடன் வந்த நபர் விமானம் பாட்னாவுக்கு விமானம் வந்து சேர்ந்தபோது திடீரென காணாமல் போய் விட்டார். விமானத்தில் கணவர் மனைவிக்கு இடையே சண்டை நடந்ததாகவும், அதன் பின்னர் கணவரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
அந்த நபரின் பெயர் முடித் சர்மா. இவர் லக்னோவுக்கு தனது மனைவி மற்றும் தனது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேருடன் விமானத்தில் வந்தார். கோவாவிலிருந்து வந்த இவர்கள் பாட்னாவில் விமானம் நின்றபோது, தனது மனைவியிடம் பாத்ரூம் போய் விட்டு வருவதாக கூறி விட்டுச் சென்றார் முடித் சர்மா. ஆனால் திரும்ப வரவில்லை.
இந்த நிலையில் விமானம் லக்னோவுக்கு கிளம்பும் நேரம் நெருங்கியது. ஆனால் தனது கணவரைக் காணவில்லை என்று முடித் சர்மாவின் மனைவி கூறவே விமானம் புறப்படுவது சற்று தாமதிக்கப்பட்டது.
முடித் சர்மா விமானத்தை விட்டு இறங்கியதாக விமான ஊழியர்கள் கூறவில்லை. முடித் சர்மா எங்கு போனார் என்பதும் தெரியவில்லை. கடைசியாக டாய்லெட்டிலிருந்து தனது மனைவிக்கு போனில் பேசியுள்ளார் முடித் சர்மா. அங்கு போய்ப் பார்த்தபோதும் அங்கு அவர் இல்லை.
தற்போது முடித் சர்மா எங்கு போனார், என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்த குழப்பம் நீங்காத நிலையில் முடித் சர்மாவின் மனைவி மற்றும் உறவினர்களுடன் விமானம் லக்னோ புறப்பட்டுச் சென்றுள்ளது.
முடித் சர்மா மாயமாவதற்கு முன்பு தனது மனைவியுடன் விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.