கொசு கடிக்குதுன்னு சொன்னது குத்தமாய்யா.. பயணியை கீழே இறக்கிவிட்ட இண்டிகோ விமான ஊழியர்கள்
Recommended Video
டெல்லி: கொசு கடிப்பதாக குற்றம்சாட்டிய பயணியை இண்டிகோ விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்து, இறக்கிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் இருந்து, பெங்களூருக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில், (6இ 541) சவுரப் ராய் என்ற பயணி சம்பவத்தன்று பயணித்தார். விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே, கொசு கடிப்பதாக சவுரப் ராய் புகார் கூறியுள்ளார். இதையடுத்து அவரை அங்கேயே இறக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட டுவிட்டுகளில், இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளது.
"விமானத்தில் ஏறியதுமே சவுரப் ராய், கொசு கடிப்பதாக புகார் கூறினார். கேபின் ஊழியர் அந்த பிரச்சினையை கேட்டுக்கொண்டிருந்தபோதே, மிகவும் ஆக்ரோஷமாக மாறிவிட்டார். மிரட்டும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பித்தார்.
மேலும் விமானத்தின் எக்சிட் இடத்தை வேகமாக அடைத்தார். அவரால் பிற பயணிகள் பீதிக்குள்ளாகினர். விமானத்திற்கு சேதம் ஏற்படுத்த முயன்றார். மேலும் 'ஹைஜாக்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். எனவே அவரை அங்கேயே இறக்கி விட வேண்டியதாயிற்று. இவ்வாறு அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்தவரான சவுரப் ராய், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என கூறப்படுகிறது.