இண்டிகோ விமானத்தில் தீ: பயணிகள் தப்பினர்
டெல்லி: டெல்லியில் இருந்து இன்று நேபாள தலைநகர் காத்மண்டுவிற்கு சென்ற விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கப்பட்டதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
டெல்லியில் இருந்து இண்டிகோ பயணிகள் விமானம் காத்மண்டுவிற்கு புறப்பட்டுச் சென்றது. அதில் 175 பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 182 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், திடீரென பின்பக்க டயரில் தீப்பிடித்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.
இதைக் கவனித்த பொறியாளர்கள் உடனடியாக விமானத்தில் உள்ளவர்களை வெளியேற்றும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பயணிகளை கீழே இறக்கினர். 171 பயணிகள் சறுக்குப்படி வழியாக மின்னல் வேகத்தில் வெளியேற்றப்பட்டனர்.
மீதமுள்ள பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் முன்பகுதியில் வழக்கமாக வரும் படிக்கட்டு வழியாக வெளியேறினர். 81 வினாடிகளில் அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
விமானத்தை தரையிறக்கும்போது பிரேக்கில் உள்ள ஹைட்ராலிக் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் நாடு திரும்புவதற்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்காக சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் காத்மண்டுவுக்கு விரைந்துள்ளார்.