இந்திரா, ராஜிவ் மீது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் பாய்ச்சல்!
டெல்லி: பதவி வெறிபிடித்தவர் இந்திரா; தேவையே இல்லாமல் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை பலி கொடுத்தவர் ராஜிவ் காந்தி என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாக சாடியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ அடிக்கடி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருபவர்.
தற்போது இந்திரா, ராஜிவ் தபால்தலைகளை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது இணையபக்கத்தில் கூறியுள்ளதாவது:
இந்திரா காந்தி பதவி வெறி கொண்டவராக இருந்தார். அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த நிலைக்கும் செல்ல அவர் தயாராக இருந்தார். தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு செய்ததாக அவர் மீது அலகாபாத் உயர் நீதிமன்றம் குற்றம் சுமத்தி தீர்ப்பளித்ததும், போலி அவசரநிலையை நாட்டில் 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அமல்படுத்தினார்.
எந்த உண்மையான காரணமும் இன்றி இந்திய ராணுவத்தை இலங்கைக்கு ராஜீவ் காந்தி அனுப்பினார். இதன் காரணமாக நமது நாட்டு ஆயிரக்கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜூ தமது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.