தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படை பிரமாண்ட கூட்டுப்பயிற்சி!
திருகோணமலை: தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை இன்று முதல் பிரமாண்ட கூட்டுப் பயிற்சியை திருகோணமலை கடற்பரப்பில் நடத்த உள்ளது.
இந்தியா, இலங்கை கடற்படைகள் ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இந்த ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சி இன்று முதல் நவம்பர் 1-ந் தேதி வரை திருகோணமலை கடற்பரப்பில் நடைபெற உள்ளது.
இந்தப் போர்ப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியக் கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் திருகோணமலை வருகை தருகின்றன. இதில் இலங்கையில் 6 போர்க்கப்பல்களும், 6 டோரா ரக அதிவேகத் தாக்குதல் படகுகளும் பங்கேற்கின்றன.
இருதரப்பும் ஆற்றல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும், பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளவும் இந்தக் கூட்டுப் பயிற்சி பயனுடையதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து கொண்டிருக்கும் இலங்கை கடற்படையுடன் எப்படி இந்தியா கடற்படை இணைந்து போர் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? என்ற எதிர்ப்புக் குரலும் கிளம்பியுள்ளது.