நவாஸ் ஷெரிப்-சுஷ்மா சந்திப்பு - அடுத்த ஆண்டு மோடி பாக். வருவார் என அறிவிப்பு
டெல்லி: பாகிஸ்தான் சென்றுள்ள, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று அந்த நாட்டு பிரதமர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள 'சார்க்' மாநாட்டில், மோடி பங்கேற்பார் எனவும் சுஷ்மா தெரிவித்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் "ஆசியாவின் இதயம்' என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் தொடர்பான மாநாடு, இன்றும், நாளையும், நடைபெறுகிறது. ஆசியப் பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
பாகிஸ்தானில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, அந்நாட்டுக்குச் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸை நேற்று சந்தித்துப் பேசினார். மாலையில்ஸ சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாக இருவரும் கைகுலுக்கி கொண்டனர். அடுத்த ஆண்டு பாகிஸ்தானின் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) மாநாடு நடைபெற உள்ளதால், அதில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்பாரா என்று நிருபர்கள் அப்போது கேள்வி எழுப்பினர். மோடி பங்கேற்பார் என சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார்.
பாகிஸ்தானுக்கு மோடி சென்றால், 12 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெயர் அவருக்கு கிடைக்கும். முன்னதாக, 2004ம் ஆண்டு ஜனவரியில், அடல் பிகாரி வாஜ்பாய், பாகிஸ்தான் நாட்டுக்கு சென்றிருந்தார்.